இந்தியாவில் தினசரி வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்களை, பேகேஜ் உணவு பொருட்களைத் தயாரிக்கும் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாரிகோ, ஐடிசி, பார்லே, பிஸ்லெரி, ஆம்வே, டாபர் உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் உற்பத்தியை அதிகரித்து அடுத்தச் சில மாதங்களுக்கு அல்லது வாரங்களுக்குப் போதுமான இருப்பைச் சேர்க்க திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் வேகமாக ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் முழு லாக்டவுன் அல்லது லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் மக்களுக்கும் போதுமான பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவுடன் அவசர காலத் திட்டத்தைத் தீட்டியுள்ளது.
இதற்கிடையில் நேற்று மோடி தலைமையில் கொரோனா தொற்று குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
FMCG நிறுவனங்கள்
நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாரிகோ, ஐடிசி, பார்லே, பிஸ்லெரி, ஆம்வே, டாபர் உட்பட அனைத்து முன்னணி FMCG நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகையில், எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் பொருட்களுக்கான தட்டுப்பாடு வர கூடாது என்பதற்காகத் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் போதுமான இருப்பை உருவாக்கி வருகிறோம்.
ஊழியர் நலன்
இதேபோல் தொழிற்சாலையில் இருக்கும் ஊழியர்களின் நலனுக்காக ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்ஸ் தயாராக வைத்துள்ளோம், மேலும் இந்தியா முழுவதும் போதுமான அளவிற்குச் சரக்குகளை இருப்பு வைக்கச் சப்ளை செயினைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
வீட்டு உபயோக பொருட்கள்
இந்திய வீடுகளில் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்குப் போதுமான இருப்புச் சந்தையில் கிடைக்காவிட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும். ஒமிக்ரான் பாதிப்பால் மத்திய மாநில அரசு அறிவிக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை வந்தாலும் இந்தத் தட்டுப்பாடு ஏற்படும்.
நாடு முழுவதும் லாக்டவுன்
கடந்த வருடம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கும் போது மக்கள் அதிகளவிலான பொருட்களைப் பயத்தால் வாங்க துவங்கினர், இதனால் அடுத்தச் சில வாரத்திலேயே பொருட்களுக்கான தட்டுப்பாடு உருவானது, இதைச் சமாளிக்க முன்கூட்டியே உற்பத்தியை அதிகரித்து நாடு முழுவதும் போதுமான இருப்பை உருவாக்க FMCG நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
உற்பத்தி மற்றும் சப்ளை
மேலும் லாக்டவுன் அறிவித்தால் பகுதி ஊழியர்களை வைத்து எப்படி அதிகப்படியான உற்பத்தியை அடைவது என்பதையும், அக்காலகட்டத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் FMCG நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது.