இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டும், அத்தியாவசிய பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14 உடன் முடிய வேண்டிய ஊரடங்கு தற்போது மாநிலங்கள் அளவில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் சில வாரங்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்திய ஈகமார்ஸ் இந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பைச் சந்திக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள்
ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் கடைகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் ஈகாமர்ஸ் துறையும் ஒன்று.
ஈகாமர்ஸ்
இந்திய ஈகாமர்ஸ் துறையில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ், பர்னீச்சர், பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடை போன்றவற்றின் வர்த்தகம் தான் அதிகம். தற்போது இவை அனைத்து பொருட்களின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் அமேசான், பிளிப்கார்ட் உட்பட அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
32 பில்லியன் டாலர்
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா-வால் இந்தியாவில் கடந்த 3 வாரம் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க மட்டுமே குறைந்தது 3 மாதம் ஆகும் என இத்துறை சந்தை ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது.
லாக்டவுன்
இந்தியாவில் தற்போது செய்யப்பட்டுள்ள லாக்டவுன் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், ஈகாமர்ஸ் நிறுவனங்கள், மக்கள், வேலைவாய்ப்பு என ஈகாமர்ஸ் துறை சார்ந்து இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தாக இருக்கிறது. இந்நிலையில் இத்துறை வர்த்தகத் தடைகளைத் தளர்க்க வேண்டும் எனவும் இத்துறை வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மளிகை பொருட்கள்
இந்த லாக்டவுன் காலத்தில் ஈகாமர்ஸ் துறை மட்டும் அல்லாமல் ஆன்லைன் டெலிவரி சேவை துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தற்போது வர்த்தகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மளிகை பொருட்களை ஆன்லைன் டெலிவரி செய்து வருகிறது.
அமேசான், பிளிப்கார்ட், சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற அனைத்து நிறுவனங்களும் தற்போது மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் புதிய வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.