இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, குறிப்பாக இண்டர்நெட் சேவை இந்தியா முழுவதும் மலிவான விலையில் கிடைக்கும் காரணத்தால் சிறு சிறு கிராமம் வரையில் டிஜிட்டல் பேமெண்ட்-ஐ மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யூபிஐ, வேலெட் பேமெண்ட் எனப் பல பேமெண்ட் சேவைகள் தற்போது சந்தையில் இருந்தாலும் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பேமெண்ட் உலகிற்குள் இழுத்தது யூபிஐ தான்.
இந்த நிலையில் 20 வருடத்திற்குப் பின் முதல் முறையாகக் காகித பணம் தனது ஆதிக்கத்தை இழந்துள்ளது, இது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பேமெண்ட்
இந்தியாவில் 20 வருடத்திற்கு முன்பு முதல் முறையாக டிஜிட்டல் பேமெண்ட் அறிமுகம் செய்யும் போது இனி பணத்தின் ஆதிக்கம் குறையும் எனப் பேசப்பட்டது, ஆனால் ஒவ்வொரு வருடமும் பணம் தான் கிங் என்று நிரூபணம் செய்து வந்தது.
20 வருடத்தில் முதல் முறையாக
அதிலும் குறிப்பாக டிஜிட்டல் பேமெண்ட் சேவை உச்சத்தில் இருந்த கொரோனா காலகட்டத்தில் கூடப் பணம் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் ஆய்வு அறிக்கை 20 வருடத்தில் முதல் முறையாகப் பணத்தின் ஆதிக்கம் குறைந்து டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கான தரவுகளை வெளியிட்டு உள்ளது
டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
தீபாவளி உடன் முடிந்த வாரத்தில் 20 வருடத்தில் முதல் முறையாகப் பணப் பரிமாற்றத்தைக் காட்டிலும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பணப் பரிமாற்ற சந்தை
இந்திய பேமென்ட் சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சி பணப் பரிமாற்ற சந்தையில் மொத்த கதையை மாற்றியுள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போன் வாயிலான பேமெண்ட் மக்கள் மத்தியில் பெரும் தாக்கை ஏற்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ ரிப்போர்ட் கூறுகிறது.
எஸ்பிஐ ஆராய்ச்சி ரிப்போர்ட்
எஸ்பிஐ ஆராய்ச்சி ரிப்போர்ட்-ல் புழக்கத்தில் இருக்கும் கரன்சி அளவு 2016ஆம் நிதியாண்டில் 88 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த அளவு 2027ல் 11.15 சதவீதம் வரையில் சரியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
2027ல் 88 சதவீதம்
இதேபோல் டிஜிட்டல் பணப் பிரமாற்றத்தின் அளவு 2016ஆம் நிதியாண்டில் 11.26 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் 80.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அளவு 2027ல் 88 சதவீதம் வரையில் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சௌமியா காந்தி கோஷ்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்புக் காரணமாக 2002 க்குப் பிறகு தீபாவளி வார பணப் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் சரிவை கண்டு உள்ளது. இதற்கு முன்பு 2009 இல் இதேபோன்ற நிலை ஏற்பட்டது, ஆனால் முற்றிலும் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட காரணத்தால் நடந்தது என எஸ்பிஐ குரூப் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் சௌமியா காந்தி கோஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
UPI அறிமுகம்
இந்தியாவில் UPI அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஒவ்வொரு மாதமும் பணப் பரிமாற்ற அளவு அதிகரித்து வரும் நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் 84 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தொட்டது. 2023 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் 30 லட்சம் கோடி ரூபாய்க்கு UPI வாயிலாகப் பணப் பரிமாற்ற நடந்துள்ளது.