இந்தியா பாராளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்களை தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் அவை உறுப்பினர்கள்.
இது எல்லாம் ஒரு பக்கம் போக, விளம்பரங்களுக்கு என்று ஒரு தனி சட்டத் திருத்ததையும் கொண்டு வரப் போகிறார்களாம்.
அப்படி என்ன சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்? என்ன மாற்றங்கள் இதில் புதிதாக இருக்கின்றன வாருங்கள் பார்ப்போம்.
விளம்பரங்கள்
"இந்த கிரீம் தடவுனா முகம் பளிங்கி மாதிரி ஆயிடும்"
"இந்த மாத்திரைய சாப்பிட்டா சுகர் போயிடும்"
"இந்த பவுடரை தேய்ச்சி குளிச்சா முடி நரைக்காது"
"இந்த மாத்திரை ஒண்ணு போட்டா சும்மா நின்னு பேசும்"
"இந்த ஜெல் போட்டா உங்களுக்கு வயசே ஆகாது" ரக விளம்பரங்களுக்கு எல்லாம் தடை விதிக்கும் விதத்தில் புதிய சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
என்ன சட்டம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை, Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Amendment Bill, 2020-ஐக் கிட்டத் தட்ட முழுமையாக தயார் செய்துவிட்டார்களாம். இந்த புதிய சட்டத் திருத்தத்தில் புதிதாக 24 நோய்கள் மற்றும் குறைபாடுகளைச் சேர்த்து இருக்கிறார்களாம்.
நோய்கள் & குறைபாடுகள்
கருப்பாக இருப்பவர்களை கலராக மாற்றுகிறேன் என்பது, குட்டையாக இருப்பவர்களை நெட்டையாக வளர வைக்கிறேன் என்பது, எய்ட்ஸ், சர்க்கரை நோய், செவிட்டுத் தன்மை, கண் பார்வை குறைபாடுகள் போன்ற 78 வகை நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு தருகிறேன் என்கிற பெயரில் விளம்பரங்களைச் செய்யக் கூடாதாம்.
வேறு என்ன எல்லாம் வரும்
ஒருவரின் அந்தரங்க வாழ்கையை வளமாக அமைத்துக் கொள்ள உதவும் என்பது, முடி நரைக்காது, என்றுமே இளமையாக இருக்க உதவும் பொருட்கள் என விளம்பரம் செய்வது, மூளைத் திறன் & நினைவாற்றலை மேம்படுத்துவதாகச் சொல்வது, பற்களை வலிமையாக வைத்திருக்க உதவும் எனச் சொல்வது போன்ற விளம்பரங்களுக்கும் தடை தானாம்.
அபராதம் + சிறை
இதையும் மீறி, மேலே சொன்ன பிரச்னைகளுக்கு விளம்பரங்களைச் செய்தால், அவர்களை இந்த Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Amendment Bill, 2020-ன் கீழ் சிறையில் அடைக்கவும், லட்சக் கணக்கில் அபராதம் விதிக்கவும் முடியுமாம். எத்தனை ஆண்டுகள் சிறை மற்றும் எவ்வளவு அபராதம் என்று கேட்கிறீர்களா..?
இதுவரை
இதுவரை மேலே சொன்ன சட்டத்தின் கீழ் தவறான விளம்பரங்களுக்கும், பொய்யான தகவலைப் பரப்பும் விளம்பரங்களுக்கும் 6 மாத சிறை மற்றும் கொஞ்சம் அபராதம் தான் விதிக்கப்பட்டது. மீண்டும் தவறு செய்தால் அவருக்கு ஒரு வருட சிறை மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது.
மாற்றம்
இனி, இது போன்ற தவறான விளம்பரங்களுக்கும், பொய்யான தகவலைப் பரப்பும் விளம்பரங்களுக்கும் முதல் முறை தண்டனையாக அதிகபட்சமாக 2 வருட சிறை + 10 லட்சம் அபராதம் விதிக்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறார்கள். இரண்டாவது முறையும் இது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள் என்றால், அதிகபட்சமாக 5 வருட சிறை + 50 லட்சம் அபராதம் விதிக்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறார்களாம்.