அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஃபோர்டு வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தியை குறைக்கவும் முடிவு செய்து, இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலையை மொத்தமாக மூட திட்டமிட்டது.
ஆனால் தற்போது இந்த முடிவில் இருந்து பின்வாங்குவதாகவும், புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஃபோர்டு. இதனால் இந்தியாவில் இருக்கும் சென்னை மற்றும் குஜராத் தொழிற்சாலையை மூடப்போவது இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம்
இந்தியாவில் தொழிற்சாலைகளை மூட திட்டமிட்ட ஃபோர்டு நிறுவனம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன பிரிவில் டெஸ்லாவுக்கு இணையாக வளர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு அமெரிக்க அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய அமெரிக்க அரசு தயார் என அறிவித்துள்ள நிலையில் ஃபோர்டு தனது முடிவை மாற்றியுள்ளது.
எலக்ட்ரிக் கார்
ஃபோர்டு நிறுவனத்தின் அமெரிக்க நிர்வாகம் எடுத்துள்ள முக்கியமான முடிவின் படி, இந்தியாவில் இருக்கும் ஃபோர்டு தொழிற்சாலையில் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு விரைவில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார் முதலில் ஏற்றுமதி செய்யவும், அதன் பின்பு உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா - ஏற்றுமதி தளம்
சென்னை மற்றும் குஜராத் தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்த சில மாதத்தில் ஃபோர்டு எடுத்துள்ள எலக்ட்ரிக் கார் தயாரிப்பு குறித்த முடிவு பெரிய அளவில் வரவேற்கப்பட்டு உள்ளது. ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழிற்சாலைகளை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி தளமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
அதிக லாபம்
மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ள வேளையிலும், இந்திய உற்பத்தி மூலம் வெளிநாட்டுச் சந்தையில் அதிகப்படியான லாபத்தைப் பார்க்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தியாவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி ஹப் ஆக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது ஃபோர்டு.
30 பில்லியன் டாலர்
மேலும் ஃபோர்டு நிறுவனம் 2030க்குள் சுமார் 30 பில்லியன் டாலர் தொகையை எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிக்காக முதலீடு செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களும் பெரிய அளவில் ஃபோர்டு நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.
2 பில்லியன் டாலர் நஷ்டம்
இந்தியாவின் மொத்த ஆட்டோமொபைல் சந்தை வர்த்தகத்தில் 2 சதவீதத்திற்கும் குறைவான வர்த்தகத்தைக் கொண்டு உள்ள காரணத்தாலும் 2 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்த காரணத்தாலும் தான் ஃபோர்டு இந்திய சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்தது. இதற்காகச் செப்டம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
4000 தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் சென்னையில் மறைமலைநகர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையும், குஜராத்திலுள்ள சனண்ட் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையிலும் சுமார் 4000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தொழிற்சாலைகள் மூடப்பட்டால் 4000 குடும்பங்கள் பாதிக்கும் நிலை உருவாகும். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.