இன்று உலகளவில் ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவிலான வர்த்தக மாற்றம் மற்றும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஒருபக்கம் எலக்ட்ரிக் வாகனங்கள் மறுபக்கம் அதிகப்படியான டெக் முன்னேற்றங்கள் உடன் மலிவு விலை கார் அடிப்படையில் ஆட்டோமொபைல் துறை மொத்தமாக மாறி வருகிறது.
இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமலும், வர்த்தகச் சந்தை மற்றும் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து சரிவைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவித்து வருகிறது.
இப்படிக் கடுமையான வர்த்தகப் பாதிப்பில் சிக்கிய ஒரு நிறுவனம் தான் ஃபோர்டு. சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு இயங்கி வரும் ஃபோர்டு இந்தியக் கிளை, இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது
ஃபோர்டு நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஃபோர்டு உலகம் முழுக்கக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளை வைத்திருக்கும் நிலையில், தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தாலும், வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாத காரணத்தாலும் இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளையும் மூட திட்டமிட்டு உள்ளது ஃபோர்டு.
தமிழ்நாட்டில் சென்னை தொழிற்சாலை
தமிழ்நாட்டில் சென்னையில் மறைமலைநகர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையும், குஜராத்திலுள்ள சனண்ட் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையிலும் கார் உற்பத்தியை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஃஃபோர்டு நிறுவனம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
4000 தொழிலாளர்கள் பாதிப்பு
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவால் இரு தொழிற்சாலைகளில் இருக்கும் சுமார் 4000 தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பை முழுமையாக இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஃபோர்டு நிறுவன ஊழியர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஃபோர்டு நிறுவனம் டிவிட்டர் பதிவு
இதுகுறித்து ஃபோர்டு நிறுவனம் தனது டிவிட்டரில் ஃஃபோர்டு இந்திய வர்த்தகத்தில் மறுசீரமைப்புச் செய்ய உள்ளது. சென்னை மற்றும் சனண்ட் பகுதியில் இருக்கும் 2 தொழிற்சாலையிலும் கார் உற்பத்தியை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளோம். ஏற்றுமதிக்காகச் சனண்ட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையை 2021 4வது காலாண்டுக்குள் குறைக்க உள்ளோம்.
சென்னை தொழிற்சாலை
இதேபோல் சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் இன்ஜின் மற்றும் கார் உற்பத்தியை 2022 2வது காலாண்டுக்குள் நிறுத்த உள்ளோம். அதுவரையில் தயாரிக்கப்படும் இன்ஜின் அனைத்தும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என ஃபோர்டு இந்தியா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் சேவை
மேலும் இந்தியாவில் ஃபோர்டு தனது வாடிக்கையாளர்கள் சேவையைத் தொடர்ந்து செய்யும், இதேபோல் உதிரிப்பாகங்கள் மற்றும் வாரென்டி சப்போர்ட் ஆகியவையும் தொடரும். மேலும் தற்போது ஸ்டாக் இருக்கும் வரையில் உற்பத்தி தொடரும்.
விற்பனை தொடரும்
தற்போது கையிருப்பில் இருக்கும் வாகனங்களை விற்பனை செய்த பின்பு ஃபோர்டு நிறுவனத்தின் உலகளவில் பிரபலமாக இருக்கும் கார்களையும், எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனங்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முஸ்டாங் கூப்பே மற்றும் முஸ்டாங் மேக்-ஈ
இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் காரணத்தால் ஃபோர்டு இனி வரும் காலத்தில் தனது ஃபோர்டு முஸ்டாங் கூப்பே மற்றும் முஸ்டாங் மேக்-ஈ கார்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது. மேலும் ஃபோர்டு வாடிக்கையாளர்கள் ஃபோர்டு நிர்வாகம் ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ள 30 பில்லியன் டாலர் மூலம் நன்மை அடைவார்கள் எனத் தனது டிவீட்டில் ஃபோர்டு இந்தியா தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு இல்லை
ஃபோர்டு இந்தியா வெளியிட்டு உள்ள டிவீட்டில் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பது குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளிலும் படிப்படியாக உற்பத்தியைக் குறைத்து விட்டு இரு தொழிற்சாலைகளையும் விற்பனை செய்யவே திட்டமிட்டு உள்ளது.
இந்திய சந்தை
ஆனால் இந்திய சந்தையில் இருந்து முழுமையாக வெளியிடவில்லை என்பதை ஃபோர்டு முஸ்டாங் கூப்பே மற்றும் முஸ்டாங் மேக்-ஈ கார்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளதாகக் கூறியது மூலம் உறுதி செய்துள்ளது.
டெஸ்லா உட்பட பலருக்கு வாய்ப்பு
ஃபோர்டு தொழிற்சாலைகள் விற்பனை செய்யப்பட்டால் இந்தியாவில் உற்பத்தியைத் துவங்க வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ள டெஸ்லா முதல் பல முன்னணி இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ் வரிசையில் தற்போது ஃபோர்டு நிறுவனமும் சேர்ந்துள்ளது.