மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றாலே நமக்கெல்லாம் நியாபகத்திற்கு வருவது, நம் கையில் பணம் இருந்தும் செலவு செய்ய முடியாமல் தவித்தது தான்.
ஏதாவது ஏடிஎம்மில் பணம் இருந்து விடாதா? பணம் எடுக்க முடியாதா என்றெல்லாம் ஏங்கிய நாட்கள். அன்றைய பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8, 2016ஐ நம்மால் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது. ஏனெனில் கையில் பணம் இருந்தும் அதை வெறும் வெற்று தாள்களாக மட்டுமே இருந்தது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் வங்கிகளின் வாசல்களில் லட்சோப லட்சம் மக்கள் காத்துக் கிடந்தனர்.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 625 டன் எடை கொண்ட பல்வேறு புதிய ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக, விமானப்படை முன்னாள் தளபதி தனோவா தெரிவித்துள்ளார். கடந்த 31 டிசம்பர் 2016 முதல் செப்டம்பர் 30, 2019 வரை தனோவா இந்திய விமானப்படையின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் தளபதி தனோவா, நாட்டின் பல பகுதிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு 32 முறை விமானங்கள் பயணித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ஆயுத தளவாட கொள்முதலை அரசியலாக்க கூடாது, அதை அரசியலாக்கினால் அது இந்தியாவுக்கே பாதிப்பு என்றும் தனோவா தெரிவித்துள்ளார்.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இனிமேல் அனைத்து பணப்பரிமாற்றமும் டிஜிட்டல் மூலமே நடைபெறும் என்று கூறப்பட்டாலும், அப்படி எதுவும் இது வரை நடக்கவில்லை. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை, டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தால் குறைக்க முடியவில்லை என்று, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட 2016-2017 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தவிர பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவின் பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம்ராஜன், 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. இந்த நிலையில், 2016-ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றும் கூறியிருந்தார்.