டெல்லி: இந்திய பொருளாதாரம் குறித்து பல பொருளாதார ஆலோசகர்கள், பல விதமாக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இவர்களின் அனைவரின் ஒட்டுமொத்த முடிவும் இந்திய பொருளாதாரம் இன்னும் சரியும் என்பதே இறுதியாக உள்ளது.
அது இந்திய பொருளாதார ஆலோசகர்களாகட்டும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களாகட்டும் வீழ்ச்சி, சரிவு, மந்தம் என வார்த்தைகள் மட்டுமே மாறி வருகின்றன. ஆனால் இதன் வெளிப்பாடு என்பது ஒன்றாகத் தான் இருக்கிறது. அது இந்திய பொருளதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது என்பது தான்.
இந்த நிலையில் இந்தியாவில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
பொருளாதார ஆலோசகர்
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் இடம் பெற்றிருந்த, 16-வது பொருளாதார ஆலோசகர் தான் அரவிந்த் சுப்பிரமணியன். இவர் இந்திய பொருளாதாரம் குறித்து இவ்வாறு தனது கருத்தினை பதிவு செய்துள்ளது கொஞ்சம் கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது. சரி அப்படி என்ன கருத்தை சொன்னார். இந்திய பொருளாதாரத்திற்கு என்ன ஆச்சு. அப்படி என்ன சொன்னார் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது
வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக, இந்திய பொருளாதாரம் பெரும் மந்த நிலையை சந்தித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் ஐயூசிக்கு செல்கிறது. முதல் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பிரமணியன் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விலகினார். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய முன்னாள் அலுவலகத்தின் தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து எழுதிய புதிய ஆய்வறிக்கையில், இந்தியா நான்கு சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளார்.
என்னென்ன பிரச்சனைகள்?
இது சவால்களில் வங்கிகள், உள்கட்டமைப்பு மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மோசமான வட்டி வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளன. ஆக இது ஒரு சாதாரண மந்தநிலை அல்ல என்றும் தெரிகின்றது. இது இந்தியாவின் பெரும் மந்த நிலையாகும். இது தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கின்றது என்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு மையத்தின் வரைவுப் பணியில் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் வாராக்கடன்
பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத நிலையில், வாராக்கடன் அளவு அதிகரித்துள்ளது. மேலும் உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலையால், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் சிதறடிக்கப்பட்டதால், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி குறைந்து விட்டது. மேலும் நுகர்வும் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில காலாண்டுகளில் வளர்ச்சி விரைவாக வீழ்ச்சி கண்டு வருகிறது.
படு வீழ்ச்சி
இந்த நிலையிலேயே இந்திய பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் அளவில் கடன்பட்டுள்ள நிலையில், உற்பத்தி விகிதமும் வீழ்ச்சியடையும் என்றும் கருதப்படுகிறது. இது இந்த துறையில் மேலும் அழுத்தம் காணும் என்றும் கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தெளிவான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், விரைவான வளர்ச்சியின் பாதையில் திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில் பொருளாதார கருவிகள் பயனுள்ளதாக இல்லை. ஆக அரசு விரைவில் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.