கொரோனா வைரஸ் பிரச்சனையால், ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இன்று வரை கொரோனா வைரஸுக்கு ஒரு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு, அது முழுமையாக புழக்கத்துக்கு வரவில்லை. பல மருந்துகள் ஆராய்ச்சி அளவிலும், சோதனைகளிலும் தான் இருக்கின்றன.

இன்று உலகிலேயே, அதிக மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஜுன் 2020 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது. 1996-ம் ஆண்டில் இருந்து தான், இந்தியா, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஜிடிபி கணக்கிடத் தொடங்கியது. அன்றில் இருந்து, இன்று வரை, எந்த ஒரு காலாண்டிலும், இந்தியாவின் ஜிடிபி, இந்த அளவுக்கு மோசமான சரிவைக் கண்டதில்லை.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், கடந்த ஆகஸ்ட் 2020 மாத காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில் (Equity), வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) 6.29 பில்லியன் டாலர் முதலீடு செய்து இருப்பதாக, செபியின் தரவுகள் சொல்கின்றன.
கடந்த மார்ச் 2020 மாதத்தில் மட்டும், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, 8.34 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை விற்று வெளியேறினார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
ஆசியாவில், சீன பங்குச் சந்தைகளைத் தவிர, மற்ற பல நாட்டு பங்குச் சந்தைளில் இருந்தும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை வெளியே எடுத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை.
சென்செக்ஸ் கடந்த மார்ச் சரிவின் போது, 24 மார்ச் 2020 அன்று, அதிகபட்சமாக 25,638 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. நேற்று (04 செப் 2020) 38,357 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக, சுமாராக இந்த ஐந்து மாத காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ், 49.6 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
அடுத்த 12 - 24 மாதங்களில், இந்திய பங்குச் சந்தைகள் நல்ல லாபம் கொடுக்கும் என அனலிஸ்ட்கள் நம்புகிறார்கள். அதே போல, உலகிலேயே, அதிவேகமாக வளரக் கூடிய பங்குச் சந்தைகளில், இந்திய பங்குச் சந்தைகளும் ஒன்று எனவும் அனலிஸ்டுகள் சொல்லி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications