இந்தியாவில் சமீப மாதங்களாக கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் இருந்து வந்தாலும், இந்தியாவில் வளர்ச்சி விகிதமானது, கணிசமான அளவு வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாத இறுதியில், நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் வரலாறு காணாத அளவு பொருளாதாரம் சரிந்தது.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாத இறுதியில் இந்திய சந்தைகள் தரை தட்டின. ஆனால் இந்த வீழ்ச்சியினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முதலீட்டாளர்கள், தொடர்ந்து இந்திய சந்தைகளில் முதலீடுகளை குவித்து வருகின்றனர்.
பட்ஜெட் ஊக்கம்
அதிலும் சமீப வாரங்களாகவே இந்திய சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. அதோடு கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது இன்னும் முதலீட்டாளர்களை ஊக்குவித்துள்ளது. ஏனெனில் பிப்ரவரி மாதத்தில் இதுவரையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 22,038 கோடி ரூபாயினை செய்துள்ளனர்.
எதில் எவ்வளவு முதலீடு?
டெபாசிட்டரி தரவின் படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20,593 கோடி ரூபாயினை ஈக்விட்டி பங்குகளிலும், 1,445 கோடி ரூபாயினை கடன் சந்தைகளிலும், கடந்த பிப்ரவரி 1 - 12 வரையில் செய்துள்ளனர். இதே ஜனவரி மாதத்தில் அன்னிய போர்ட்போலியோ 14,649 கோடி ரூபாய் முதலீட்டினை மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் முக்கிய பங்கு
இது குறித்து மார்னிங் ஸ்டார் இந்தியாவின் ரிசர்ச் தலைவர், பட்ஜெட்டுக்கு பின்பு, பலமான நேர்மறையான கருத்துகள் நிலவி வருகின்றன. இதனால் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அரசின் இந்த பட்ஜெட் 2021 அறிக்கையானது பொருளாதாரத்தினை மீட்டுக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை பலமாக இருந்து வருகின்றது.
குறைந்து வரும் கொரோனா பரவல்
அதோடு இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருகின்றது. இதுவும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகளுக்கும் சாதகமாக வந்து கொண்டுள்ளன. ஆக இதெல்லாம் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணிகளாக இருக்கும். இது அரசுக்கு மேலும் சப்போர்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு பிடித்த பங்குகள்
குறிப்பாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பார்மா செக்டார் நல்ல ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் வங்கி துறை வாரக்கடன் பயத்தில் சற்று அழுத்தத்தில் உள்ளது. ஐடி பங்குகள் வழக்கம்போல முதலீட்டாளர்களுக்கு பிடித்தமான பங்குகளாக மாறியுள்ளன. இதற்கிடையில் 4வது காலாண்டிலும் அன்னிய முதலீடுகள் வரத்தானது அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.