கொரோனா வைரஸைத் தொடாமல் இன்று உலகில் கிட்டத்தட்ட எந்த ஒரு செய்தியும் இல்லை. அந்த அளவுக்கு கொரோனா போதுமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
சரி அதை எல்லாம் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, என்ன உருப்படியாக செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், மகாராஷ்டிரா நம்மை கவர்ந்து இழுக்கிறது.
அப்படி என்ன பெரிதாக செய்துவிட்டார்கள்..? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
கொரோனா மகாராஷ்டிரா
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா பரவிக் கொண்டு இருக்கும் மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான். இதுவரை சுமாராக 11,500 பேருக்கு தொற்று இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். சுமார் 485 பேர் மரணித்து இருக்கிறார்க. இந்த நெருக்கடியான நேரத்தில் தான் அந்த நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்
மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்ய உஓஜனா (Mahatma Jyotiba Phule Jan Arogya Yojana) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மாநில மக்கள் அனைவரும் இலவசமாக அல்லது பணம் கொடுக்காமல் ஹெல்த் இன்சூரன்ஸ் சலுகைகளை அனுபவிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார். உண்மையாகவே இது வரவேற்க வேண்டிய விஷயம் தான்.
விண்ணப்பம்
இந்த திட்டத்தில், விண்ணப்பிக்க அல்லது சேர ரேஷன் அட்டை மற்றும் குடியிருப்புச் சான்று (Domicile Certificate) வேண்டுமாம். இந்த திட்டத்தின் கீழ் இதற்குமுன் 85 % மக்கள் வருவார்களாம். இப்போது மீதமுள்ள 15 சதவிகித மக்களும் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
15 % மக்கள்
இந்த அறிவிப்புக்குப் பின், மாநில அரசு ஊழியர்கள்,
அரசு உதவி பெறும் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள்,
வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் போன்றவர்களும் Mahatma Jyotiba Phule Jan Arogya Yojana ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாமாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அதோடு மகாராஷ்டிர அரசு, ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுத் துறை சங்கத்துடன் (General Insurance Public Sector Association - GIPSA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்களாம். அதன் படி கொரோனா பாதித்த நோயாளிகளை புனே மற்றும் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.
1000 மருத்துவமனைகள்
அதோடு, அனைத்து வகையான நோய்களுக்கும் பல தரப்பட்ட பேக்கேஜ்களை திட்டமிட இருக்கிறார்களாம். அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைகளுக்கு ஒரே மாதிரியான கட்டணங்களை வசூலிக்கவும் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதற்கு முன், 496 மருத்துவமனைகள் தான் அரசு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இருந்ததாம். ஆனால் இப்போது 1,000 மருத்துவமனைகளாக மாதிகரித்து இருக்கிறார்களாம்.
கட்டணம்
குறிப்பாக கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் மகாராஷ்டிர மாநில அரசு உச்ச வரம்பை விதித்து இருக்கிறதாம்.