இன்றோடு நடப்பு நிதியாண்டு, நடப்பு மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள 10 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
இது சாமானிய மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?
குறிப்பாக இபிஎஃப் வட்டிக்கு வரி, சிலிண்டர் விலை, கிரிப்டோகரன்சிக்கு வரி, இன்னும் வேறு என்னென்ன மாற்றங்கள், நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையானது அதிகரிப்பது வழக்கமான ஒரு விஷயம். ஆக தொடர்ந்து சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலையானது அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 1 அன்று சிலிண்டர் விலையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அஞ்சலக திட்டங்களுக்கான வட்டி
அஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், டைம் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதமானது, ஏப்ரல் 1 முதல் நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்பப்படும். நீங்கள் பணத்தினை மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ வட்டி விகிதத்தினை எடுத்தாலும் அனைவருக்குமே இந்த புதிய மாற்றமானது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ரொக்கமாக கிடைக்காது.
வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் பங்களிப்பு இருந்தால், அதற்கு கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி வசூலிக்கப்படும். பொதுவாக இந்த திட்டத்தில் வட்டி அதிகம் என்பதாலேயே இது சம்பளதாரர்கள் மத்தியில் நல்லதொரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆக இனி அதிகரிக்கும் பட்சத்தில் இது சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கிரிப்டோகரன்சிக்கு 30% வரி விதிப்பு
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டிலேயே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வரி விகிதமானது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
மின்னணு விலைப்பட்டியல்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூ.20 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலைப்பட்டியல்களை ஏப்ரல் 1 முதல் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்தே ரூ.50 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B பரிவர்த்தனைகளுக்கு மின்-விலைப்பட்டியலை உருவாக்கி வருகின்றன.
மாநில அரசு ஊழியர்களுக்கு 14% வரி விலக்கு
மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் (NPS) கணக்கில் நிறுவனங்கள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது முன்னதாக 10% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரி விலக்கு சலுகையினை 2022- 23ம் ஆண்டில் இருந்து மாநில அரசு ஊழியர்கள் பெற்று கொள்ளலாம் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த வரிச் சலுகையானது மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
80EEA வரி சலுகை இனி கிடையாது?
2022 - 2023ம் நிதியாண்டு முதல் (ஏப்ரல் 1 முதல்), முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு பிரிவு 80EEA இன் கீழ் கூடுதல் வரி விலக்கின் பலன் இனி கிடைக்காது. 2018-19 நிதியாண்டின் பட்ஜெட்டில், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான பிரிவு 24(b) 2 லட்சத்துக்கு மேல் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமான வரிச் சலுகையை அரசாங்கம் அறிவித்திருந்தது. இது தொடர்ந்து 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் புதிய நிதியாண்டு முதல் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஐடிஆர்களை தாக்கல்
வருமான வரி செலுத்துவோர் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள், புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கும். எனினும் கூடுதல் இழப்பு அல்லது வரிப் பொறுப்பில் வீழ்ச்சியைப் புகாரளிக்க இந்த விதியை பயன்படுத்த முடியாது.
ஆக்ஸிஸ் வங்கி குறைந்தபட்ச இருப்பு வரம்பு
ஆக்ஸிஸ் வங்கியின் சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்பு வரம்பு 10,000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக அதிகரிக்கும். இது சம்பளம் மற்றும் சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
அவசர கால மருந்துகள் விலை உயர்வு
பல அத்தியாவசிய மருந்துகள் உட்பட 800-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் விலை ஏப்ரல் 1 முதல் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணயம் ஆணையம் அறிவித்துள்ளது. இது அதிகட்சம் 10.70% அளவுக்கு விலை உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.