பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் விலை உயர்வில் இருந்து மக்களுக்குத் தற்காலிக விடுதலை கிடைத்துள்ள வேளையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களைப் பயமுறுத்தும் மற்றொரு பிரச்சனை இந்தப் புத்தாண்டுக்கு உருவாகியுள்ளது.
இந்தப் புத்தாண்டு முதல் அத்தியாவசிய மளிகை பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ஹோட்டல் சாப்பாட்டு விலை அதிகரிக்க உள்ளது.
2022 முதல்
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு முதல் அனைத்து துறையிலும் அதிகப்படியான பாதிப்புகளையும் மாற்றங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 2022 முதல் சரக்கு போக்குவரத்து, பேகேஜிங் மற்றும் விவசாயப் பொருட்களின் விலை அதிகரிக்கும் காரணத்தால் மளிகை பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ஹோட்டல் சாப்பாடு விலை அதிகரிக்க உள்ளது.
டெய்ரி துறை
உலகளவில் டெய்ரி துறையின் பணவீக்கம் 10 சதவீதம் வரையில் அதிகரிக்கும் காரணத்தால், , இந்தியாவிலும் பால் மற்றும் பால் சார்ந்த அனைத்து டெய்ரி பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமுல் நிறுவனம்
இதுக்குறித்து அமுல் பிராண்டின் தாய் நிறுவனமான GCMMF-ன் நிர்வாகத் தலைவர் ஆர்.எஸ்.சோதி கூறுகையில் 2022 கோடைக் காலம் முதல் அனைத்து டெய்ரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
நெஸ்லே
இதேபோல் நெஸ்லே இந்தியாவின் தலைவர் சுரேஷ் நாரயணன் கூறுகையில் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பால் 2022ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருட்களின் விலை உயர்வும் எனத் தெரிவித்துள்ளார்.
டிமாண்ட்
கொரோனா தொற்றில் இருந்து 2 வருடம் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை இருந்த காரணத்தால் 2022 முதல் அதிகப்படியான வளர்ச்சியும் டிமாண்ட்-ம் உருவாகும். தற்போதைய நிலவரப்படி பால் மற்றும் காஃபி பொடியின் விலை அதிகரிக்கும். காஃபி பொடி தயாரிக்கும் கோக்கோ சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேகேஜிங் பொருட்கள்
எண்ணெய் சந்தையில் பெட்ரோ கெமிக்கல் விலை உயர்வின் காரணமாகப் பேகேஜிங் பொருட்களின் விலை பெபிய அளவில் அதிகரிக்கும் காரணத்தால் பேகேஜ் செய்யப்பட்ட பொருட்களின் விலை அனைத்தும் உயர உள்ளது.
சமையல் எண்ணெய் விலை
மேலும் சமையல் எண்ணெய் விலை இந்த வருடம் பெரிய அளவில் உயர்ந்த நிலையில் 2022ஆம் ஆண்டும் டிமாண்ட் அதிகரிக்கும் காரணத்தால் விநியோகத்தில் நெருக்கடி உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் பாமாயில், சன்பிளவர் ஆயில், ரைஸ் பிரான்ட் ஆயில், ஆகிய அனைத்து சமையல் எண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தலைமுறைக்கு ஒரு முறை
இந்த விலை உயர்வு இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ஏற்படுகிறது. இதை ஒரு தலைமுறைக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என டெட்டால் மற்றும் லைசால் தயாரிக்கும் ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் உணவு
இதற்கிடையில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சேவை வரிகள் 2022 முதல் நடைமுறைக்கு வரும் காரணத்தால் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.