தமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு. க ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், இன்று 16வது சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இந்தச் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் மிகவும் முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுவது முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு தான்.
இக்குழுவில் யார் யார் இருக்கிறார்கள் தெரியுமா..?!
தமிழ்நாட்டின் பொருளாதாரம்
தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை கடந்த 10 வருடத்தில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. குறிப்பாக மாநிலத்தின் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையை முற்றிலுமாக மாற்றிப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு புதிய பொருளாதார ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை குழு
இந்தக் குழு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளது. இக்குழுவில் ஒன்றிய அரசே ஆச்சரியப்படும் அளவிற்கு முக்கியமான 5 பேர் இடம்பெற்று உள்ளனர்.
ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்திய நிதியியல் சேவைத் துறையில் பல புதுமைகள், MSME நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் எனப் பல முக்கியப் பணிகளைச் செய்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டு உள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார்.
வறுமை ஒழிப்பில்
உலக நாடுகளில் இருக்கும் வறுமையைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்ததற்கு நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ-வும் தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டு உள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க இவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
பொருளாதார வல்லுனர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டு உள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பணியாற்றிய இவரது அனுபவம் தமிழ்நாட்டுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.
பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ்
பெல்ஜியம் நாட்டில் பிறந்த இந்தியப் பொருளாதார வல்லுனரான ஜீன் ட்ரெஸ் இந்தியாவில் சமூக நலத்திற்காகவும், பாலின சமத்துவமின்மை-க்கு எதிராகவும் பணியாற்றி வருகிறார். இவர் அமர்தியா சென், ஆன்கஸ் டியாடன் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் உடன் பணியாற்றியுள்ளார். தற்போது டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரும் தற்போது தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டு உள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார்.
முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன்
இந்தியாவின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் சுமார் 40 வருடங்களாக மத்திய மாநில அரசுடன் பணியாற்றி வருகிறார். 2003 முதல் 2004 வரையில் இந்தியப் பிரதமருக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.
இதுமட்டும் அல்லாமல் நிதியமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, விவசாயம், பெட்ரோலியம் என 30க்கும் அதிகமானத் துறையில் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பணியில் பணியாற்றியுள்ளார்.
தற்போது எஸ். நாராயணன் அவர்களும் தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டு உள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications