உலகப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதிப்பை இந்த 2022 ஆம் ஆண்டில் எதிர்கொண்டது யாராலும் மறக்க முடியாது, சரி 2023ல் எப்படி இருக்கும் என்று பார்த்தால் இன்னும் மோசமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
பொருளாதார மந்த நிலையை இன்னும் துவங்காத நிலையிலேயே உலக நாடுகள் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டு வருகிறது விலைவாசி உயர்வு, உற்பத்தி குறைவு, பல பகுதிகளில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, திரும்பும் பக்கம் எல்லாம் பணிநீக்கம் என மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் 2023 ஆம் ஆண்டு இன்னும் மோசமான நிலை ஏற்படும் என்றால் என்னவெல்லாம் பாதிக்கப்படும்..? எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படும்..?
கொரோனா தொற்று
2022 ஆம் ஆண்டு துவங்கும் போது கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து வேகமான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் அடிவைக்கத் துவங்கிய போதும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு பிரச்சனையாக வெடிக்கத் துவங்கியது.
பொருளாதார வளர்ச்சி
இதனால் ஒட்டுமொத்த உலகின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு உள்ளது. 2022 பிப்ரவரி மாதம் இறுதியில் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தீவிரமாகத் தாக்குதல் நடத்திப் பல பகுதிகளைக் கைப்பற்றியது மட்டும் அல்லாமல் இந்தப் பாதிப்பு தினமும் தொடர்கிறது.
ரியல் எஸ்டேட், கச்சா எண்ணெய்
இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது, கச்சா எண்ணெய் விநியோகம் பாதிப்பால் பணவீக்கம் அதிகரித்தது.
வட்டி விகிதம்
இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உலக நாடுகளின் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் அடுத்தடுத்து வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீத கணிப்புத் தற்போது 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023 மோசம்
அப்போ 2023 ஆம் ஆண்டு இதை விட மோசமாக இருக்குமா என்றால்..? கட்டாயம் மோசமாகத் தான் இருக்கும். தற்போது ப்ளூம்பெர்க் பொருளாதார ஆய்வுகளின் படி உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2023ல் வெறும் 2.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என அறிவித்தது.
பிரச்சனைகளின் வீரியம்
ஆனால் ஒரு விஷயம், தற்போது இருக்கும் பிரச்சனைகளின் பாதிப்புகள் மோசமானால் சற்றும் எதிர்பார்க்காத பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ப்ளூம்பெர்க் பொருளாதார ஆய்வுகள் கூறுகிறது. உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன..?
ஐரோப்பா, அமெரிக்கா, சீனா
ஐரோப்பாவில் மோசமான எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது, அமெரிக்காவில் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே ரெசிஷன் உருவாகியுள்ளது, சீனாவில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் இதைக் கட்டுப்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சீனாவில் ரியல் எஸ்டேட் பிரச்சனை இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
அனைத்திற்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் இருப்பது மட்டும் அல்லாமல் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதேவேளையிலே நவம்பர் 15 ஆம் தேதி தாக்குதலில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை உக்ரைன் எல்லையில் இருக்கும் போலாந்து நாட்டின் மீது விழுந்து இரண்டு பேர் மரணம் அடைந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இந்தச் சம்பவம் தொடர்ந்து இந்தோனேசிய மாநாட்டில் பிசியாக இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர அவசரமாக ஜி7 மற்றும் NATO தலைவர்களிடம் மீட்டிங்கு நடத்தினார். இதற்கு முக்கியக் காரணம் போலாந்து NATO அமைப்பில் இருக்கும் நாடுகளாகும்.
போலாந்து
தற்போது போலாந்து மீது விழுந்த ரஷ்யாவில் செய்யப்பட்ட ஏவுகணை குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இது மட்டும் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பினால்.. மிகப்பெரிய போர் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது, இதேபோல் ரஷ்யாவும் நிலைமையை மோசமாக்க விரும்பாத நிலையில் தான் உள்ளது.
சர்வதேச பொருளாதாரம் 2023
உலகளவில் பிரச்சனைகள் மேலே குறிப்பிட்ட அனைத்தும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டால் சர்வதேச பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் -0.5 சதவீதம் வரையில் சரியும்.
5 லட்சம் கோடி டாலர்
இதனால் மூலம் உலக நாடுகள் 5 டிரில்லியன் டாலர் அதாவது 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவிலான இழப்பு ஏற்படும் எனவும் ப்ளூம்பெர்க் கணித்துள்ளது. ஆனால் இந்த அளவீட்டில் போலாந்து - ரஷ்யா - NATO போர் குறித்த தாக்கத்தைக் கணக்கிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.