மத்திய ரிசர்வ் வங்கிக்கு எப்போதுமே இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய பங்கு உண்டு.
அதற்கு பொருளாதாரம் எப்படி இருக்கிறது, நுகர்வோரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் தானே இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் மேம்படுத்த முடியும்.
எனவே ஆர்பிஐ ஒற்றைப் படை மாதங்களில் (ஜன, மார், மே, ஜூலை, செப், நவ) நுகர்வோர் நம்பிக்கை சர்வே (Consumer Confidence survey) எடுப்பார்கள். இந்த முறை நுகர்வோர் நம்பிக்கை சர்வே தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட தரவுகள் கொஞ்சம் அரசு தரப்பை அதிர்ச்சி கொள்ளச் செய்து இருக்கிறது.
இரண்டு விஷயங்கள்
இந்த நுகர்வோர் நம்பிக்கை சர்வேயில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.
1. தற்போதைய நிலைக் குறியீடு (Current Situation Index)
2. வருங்கால எதிர்பார்ப்புக் குறியீடு (Future Expectation Index). பொது பொருளாதார சூழல், வேலை வாய்ப்பு, விலை வாசி, வருமானம், செலவழிப்பது போன்றவைகளின் அடிப்படையில் இந்த சர்வே எடுப்பார்கள்.
நுகர்வோர் நம்பிக்கை சர்வே
கடந்த ஜூன் 04, 2020 அன்று மத்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை சர்வே தரவுகளை வெளியிட்டது. நுகர்வோர்கள் மிகவும் நம்பிக்கை இழந்து இருப்பதாகவே சர்வே முடிவுகள் சொல்கின்றன. current situation index (CSI) வரலாறு காணாத அளவுக்கு, மே 2020-ல் 63.7 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறதாம்.
எதிர்காலம்
அதே போல future expectations index என்கிற தரவு எதிர்காலத்தைக் குறித்து மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாம். அந்த future expectations index மே 2020-க்கு 97.9 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறதாம். மோடி ஆட்சி காலத்தில் இந்த வருங்கால எதிர்பார்ப்பு இண்டெக்ஸ் 100 புள்ளிகளுக்குக் கீழ் போவது இதுவே முதல் முறையாம்.
மக்கள் தரப்பு
பொது மக்களுக்கு பொருளாதார சூழல் பற்றியை பார்வை, வேலை வாய்ப்பு சூழல் மற்றும் குடும்பங்களுக்கு வரும் வருமானம் என எல்லாமே இப்போதும் சரி, அடுத்த ஒரு வருட காலத்திலும் சரி மோசமாக இருக்கும் எனத் தோன்றுவதாகச் சர்வேயில் சொல்லி இருக்கிறார்கள் மக்கள். அதோடு நுகர்வோர் தன் செலவுகளைக் குறைத்துக் கொண்டதையும் சர்வே சுட்டிக் காட்டுகிறது.
விலைவாசி
இந்தியப் பொருளாதாரம் 2020 - 21 நிதி ஆண்டில் ரெசசனை நோக்கிச் செல்வதாக, மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், கடந்த மாதத்தில் சொல்லி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதோடு, வரும் மாதங்களில் விலை வாசியும் பயங்கரமாக அதிகரிக்கும் எனவும் சர்வே சொல்கிறதாம். இந்த சவால்களை எல்லாம் அரசு எப்படி சமாளித்து, சரி செய்யப் போகிறதோ அரசுக்கு தான் வெளிச்சம்.