இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் திறனும் அதிகரித்து வருகிறது. ஆனால் நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது சரக்கு போக்குவரத்து.
இந்தியாவில் அனைத்து பொருட்களின் லாஜிஸ்டிக்ஸ்-ம் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக உற்பத்தி பொருட்களின் விலையில் பெரும் பகுதி லாஜிஸ்டிக்ஸ் செலவுகளாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
இந்தச் செலவுகளைக் குறைக்கவும், பொருட்களின் விலையைக் குறைத்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவான விலையை உருவாக்கவும், நாடு முழுவதும் இருக்கும் உற்பத்தி தளங்களை இணைக்கும் மாபெரும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுத் திட்டம் தீட்டியுள்ளது.
1200 தொழிற்சாலை பகுதிகள்
இந்தியாவில் இருக்கும் 1,200க்கும் அதிகமான இண்டஸ்ட்ரீயல் கிளஸ்டர்ஸ் (இதில் 2 பாதுகாப்புத் துறை தொழிற்சாலை பகுதிகளும் அடக்கம்) அதாவது தொழிற்சாலை பகுதிகளைப் போக்குவரத்துக்காகப் பல வழிகளில் இணைக்க (multi-modal connectivity) பிரதமர் மோடி தலைமையிலான அரசு வகுத்துள்ளது.
கதி சக்தி திட்டம்
இந்த மாபெரும் திட்டத்திற்குப் பெயர் கதி சக்தி (Gati Shakti) எனப் பெயரிடப்பட்டு உள்ளது, கதி சக்தி என்றால் வேகத்தின் சக்தி எனப் பொருள். இத்திட்டத்தைச் சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த மோடி அரசு திட்டமிட்டு உள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலை
கதி சக்தி மூலம் தொழிற்சாலை பகுதிகளை இணைப்பது மூலம் நாட்டின் போக்குவரத்து பெரிய அளவில் மேம்படுவது மட்டும் அல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் விரைவாகவும், குறைந்த பயண நேரத்திலும் சென்று அடைய முடியும். இதன் மூலம் போக்குவரத்து செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் உற்பத்தி பொருட்களின் செலவுகளும் குறையும்.
போக்குவரத்து முக்கியமான பிரச்சனை
இதன் மூலம் இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் பொருட்களின் விலை அனைத்தும் குறைந்து மக்களுக்கும் வெளிநாட்டுச் சந்தைக்கும் சாதகமான விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இந்தியாவில் தற்போது உற்பத்தித் துறைக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் போக்குவரத்தும் முக்கியமானவை என்றால் மிகையில்லை.
முக்கியத் துறை பூங்காக்கள்
தற்போது மோடி அரசு பட்டியலிட்டு உள்ளது 1200 தொழிற்சாலை பகுதிகளில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பூங்காக்கள், ஐடி, பார்மா, மருத்துவ உபகரணங்கள், மீன்பிடி தளங்கள், துறைமுகங்கள், டெக்ஸ்டைல் பார்க்குகள் ஆகிய அனைத்தும் இந்தக் கதி சக்தி மாஸ்டர் பிளான் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.
சாகர்மாலா, பார்த்மாலா உடன் இணைப்பு
இதுமட்டும் அல்லாமல் இந்தக் கதி சக்தி திட்டம் ஏற்கனவே மத்திய அரசு திட்டமிட்டு இருக்கும் சாகர்மாலா, பார்த்மாலா, உதான், ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம், உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து, பார்த் நெட் ஆகியவற்றை இணைத்து இயங்க உள்ளது.
சப்ளை செயின் வழிகள்
இந்தியாவில் சப்ளை செயின் வழிகளை மேம்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்து எளிதான ஒன்றாக மாறிவிடும். இது நாட்டின் வர்த்தகம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஜிடிபி-யில் சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் 14 சதவீதமாக உள்ளது. உலக நாடுகளில் சராசரியாக இது 8 சதவீதமாக உள்ளது.
செப்டம்பர் மாதம் அறிமுகம்
இந்தக் கதி சக்தி திட்டத்தை மோடி ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் முறையாக அறிவித்தார். இத்திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் திட்ட வடிவத்தை மத்திய அரசு விளக்க உள்ளது. இத்திட்டம் மூலம் போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 பிரிவுகள் இணைப்பு
தற்போது கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் கதி சக்தி மூலம் 197 உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் மற்றும் அக்ரோ கிளஸ்டர்ஸ்கள், 202 மீன்பிடி தளங்கள் மற்றும் துறைமுகங்கள், 2 டிபென்ஸ் காரிடார்ஸ், 109 பார்மா மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தளங்கள், 90 டெக்ஸ்டைல் பார்க்குகள் இணைக்கப்பட உள்ளது.