இந்தியாவை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ள பண்டோரா பேப்பர்ஸ் தரவுகள் அடுத்தடுத்து பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. இந்தியாவில் இருந்து சுமார் 300க்கும் அதிகமான பணக்காரர்கள் வெளிநாட்டில் ரகசியமாகவும், முறைகேடாகவும் சொத்து சேர்த்து வைத்துள்ளது இந்தப் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் முக்கியத் தொழிலதிபரான கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி வெளிநாட்டில் சொத்துக்களைக் குவித்து வைத்திருந்தது தற்போது பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ்
உலகின் மிக முக்கியமான 14 நிதி நிறுவனங்களில் 600க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் இணைந்து ரகசிய புலனாய்வைச் செய்துள்ளது. இந்தக் கூட்டமைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனமும் அடக்கம்.
இந்த ரகசிய புலனாய்வில் 300க்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில், யார் எப்படி எவ்வளவு சொத்துக்களை வெளிநாட்டு ரகசிய கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வினோத் அதானி
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி 3 வருடங்களுக்கு முன்பு வரிச் சலுகை நிறைந்த பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் Hibiscus RE Holdings Limited என்ற நிறுவனத்தை நிறுவியதாகவும், அந்த நிறுவனம் தற்போது மூடப்பட்டு உள்ளதாகவும் வினோத் அதானி கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது,
பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட்
பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் வினோத் அதானி 2018ல் பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் Hibiscus RE Holdings நிறுவனத்தைத் துவங்கி, இந்நிறுவனத்தின் மொத்த 50,000 பங்குகளுக்கும் மொத்த உரிமையாளராகவும் வினோத் அதானி இருந்துள்ளார். இவர் சைப்ரஸ் குடியுரிமை பெற்றுத் துபாயில் வாழ்ந்து வருகிறார்.
15 மில்லியன் டாலர் மதிப்பு
இந்த நிறுவனத்தை முதலில் துவங்கும் போது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சேவை விரிவாக்கத்திற்காகத் துவங்கப்படுவதாக வினோத் அதானி கூறியுள்ளார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 10-15 மில்லியன் டாலராக உள்ளது.
சைப்ரஸ் குடியுரிமை
வினோத் அதானி தற்போது சைப்ரஸ் குடியுரிமை உடன் துபாயில் வாழ்ந்து வந்தாலும் இவருடைய மகள் பிரணவ் அதானி, அதானி குழுமத்தில் பல முக்கியப் பதவிகளில் இருக்கிறார்.
ட்ரைடென்ட் டிரஸ்ட் கம்பெனி
மேலும் பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் இருக்கும் Hibiscus RE Holdings Limited என்ற நிறுவனத்தை நிறுவுவதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் இடைத்தரகர் ஆக இருந்தது ட்ரைடென்ட் டிரஸ்ட் கம்பெனி தான்.
சுபீர் மித்ரா
மேலும் Hibiscus நிறுவனத்தின் அதிகாரியாகச் சுபீர் மித்ரா என்பவர் இருந்துள்ளார், இவரும் துபாய் நாட்டைச் சேர்ந்தவராகத் தான் இருந்துள்ளார் எனப் பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
2016 பனாமா பேப்பர்ஸ்
அதானி குடும்பத்தில் இதுபோன்ற வரிச் சலுகை நிறைந்த நாடுகளில் ரகசிய நிறுவனங்களை வைத்திருப்பது குறித்து வெளியாகும் செய்து புதியது இல்லை. 2016ல் பனாமா பேப்பர்ஸ் வெளியாகும் போது பாஹாமாஸ் பகுதியில் ஒரு நிறுவனத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வினோத் அதானி பதில்
இதுகுறித்து வினோத் அதானி கூறுகையில், பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் இருக்கும் Hibiscus RE Holdings Limited மூலம் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் என்னுடைய ரியல் எஸ்டேட் மற்றும் நிறுவனத்தின் வாகனங்களை நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஹோல்டிங் நிறுவனம்.
Hibiscus நிறுவனம் மூடப்பட்டது
தற்போது Hibiscus நிறுவனம் முழுமையாக மூடப்பட்டது. மேலும் 25 வருடங்களாக நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன், அனைத்தும் சட்ட அடிப்படையில் தான் நிர்வாகம் செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.