இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த கௌதம் அதானி மற்றும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்தைக் கைப்பற்றிய பின்பு, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் செய்த அதிரடி வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி டாப் 10 பட்டியலில் 2வது இடம் வரையில் முன்னேறினார்.
இதன் மூலம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்து இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கும் கௌதம் அதானி 2 முறை செத்து பிழைத்த கதையைக் கௌதம் அதானி சமீபத்தில் ஒரு நேர்காணலில் விவரித்தார்.
உயிர் போகும் நிலையில் கூடத் தன்னுடைய நிதானத்தை இழக்கவில்லை, சொல்லப்போனால் தான் கடத்தப்பட்ட நாளின் இரவில் நன்றாகத் தூங்கியதாக இந்க பேட்டியில் தெரிவித்தார் கௌதம் அதானி.
கௌதம் அதானி
கௌதம் அதானி Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது அவருடைய பர்சனல் வாழ்க்கை குறிப்பாகக் குடும்பம், தன்னுடைய அனுபவம், இழந்தது, பெற்றது எனப் பல விஷயங்களை ஜாலியாகப் பேசியுள்ளார். இந்தப் பேட்டியில் முக்கியமாகத் தனது வாழ்க்கையில் 2 முறை மரணத்திற்கு அருகில் சென்று வந்ததை விவரித்தார்.
அதானி எக்ஸ்போர்ட்ஸ்
கௌதம் அதானி 1988 ஆம் ஆண்டில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் கமாடிட்டிஸ் வர்த்தகத்தைக் குஜராத் மாநிலத்தில் கட்டமைத்து வந்தார். இந்த அதானி எக்ஸ்போர்ட்ஸ் ஆரம்பம் முதல் சிறப்பான வளர்ச்சியை அடைந்த வந்த நிலையில் குஜராத் மாநிலம் முழுவதும் அதானியின் புகழ் பரவி இருந்தது.
1998ல் கடத்தல்
இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டில், கௌதம் அதானியின் வளர்ச்சியைக் கண்டு, இவரைக் கடத்தினால் பெரும் தொகையைப் பார்க்க முடியும் எனக் கடத்தல்காரர்கள் திட்டமிட்டு அவரைக் கடத்த முயன்றனர்.
மீட்பு தொகை
இப்போதே கோடீஸ்வரர் ஆக இருந்த கௌதம் அதானியை கடத்திய நிலையில் கடத்தில்காரர்கள் கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவன ஊழியர் சாந்திலால் படேல்-ஐ கடத்தி சுமார் 1.5-2 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கேட்டு உள்ளது.
FIR அறிக்கை
போலீசார் தாக்கல் செய்த FIR அறிக்கைப் படி 1 ஜனவரி 1998 அன்று, அதானியும் அவரது தோழர் சாந்திலால் படேலும் இங்குள்ள கர்னாவதி கிளப்பில் இருந்து காரில் முகமதுபுரா சாலையில் சென்றபோது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். ஒரு ஸ்கூட்டர் காரை வலுக்கட்டாயமாக நிறுத்தியதாகவும், பின்னர் ஒரு கும்பல் வேனில் வந்து இருவரையும் கடத்திச் சென்றதாகவும் இந்த எப்ஐஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூக்கம்
இந்தக் கடத்தப்பட்ட இரவில் கௌதம் அதானி டென்ஷன் ஆகாமல், நிதானத்தை இழக்காமல் நன்றாகத் தூங்கியதாக அதானி இந்தப் பேட்டியில் தெரிவித்தார். இதனால் இந்தப் பேட்டி கூடுதல் சுவாரஸ்யமானது.
2வது சம்பவம்
கௌதம் அதானியின் இரண்டாவது மரணத்திற்கு நிகரான அனுபவம் 2008 இல் மும்பையில் பயங்கரவாதிகள் மிகக் கொடிய தாக்குதலைத் தொடுத்தபோது ஏற்பட்டது. நவம்பர் 26, 2008 அன்று, அதானி மும்பையின் தாஜ் ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகளால் தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டது.
தாஜ் ஹோட்டலில்
தாஜ் ஹோட்டலில் இருக்கும் மசாலா கஃபே-வில் துபாய் போர்ட் சிஇஓ உட்படத் தனது நண்பர்களுடன் வர்த்தகக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்கு உள்ளானது, மட்டும் அல்லாமல் வெறும் 15 அடி தொலைவில் தான் மரணத்தைப் பார்த்ததாக இந்தப் பேட்டியில் கௌதம் அதானி கூறியுள்ளார். தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகளைத் தான் பார்த்ததாகவும் கௌதம் அதானி தெரிவித்தார்.
ஒரு ரவுண்ட் மீட்டிங்
துபாயில் இருந்து மும்பை வந்த என் நண்பர்களுடன் தாஜ் ஹோட்டலில் ஒரு ரவுண்ட் மீட்டிங்-ஐ முடித்துவிட்டுப் பில் செலுத்திவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேற இருந்தேன், அப்போது எனது நண்பர்கள் சிலர் மற்றொரு ரவுண்ட் மீட்டிங்-ஐ நடத்த வலியுறுத்தினார்கள்.
இரவு உணவு
இதனால் இரவு உணவை அதே தாஜ் ஹோட்டலில் இருக்கும் மசாலா கஃபே உணவகத்தில் சாப்பிட முடிவு செய்தேன். ஒரு கப் காபியுடன் அடுத்த ரவுண்ட் மீட்டிங்-ஐ தொடங்கிய வேளையில் தான் தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டது.
பில் கட்டியிருந்தால்
சில நிமிடங்களில் ஹோட்டல் ஊழியர்கள் என்னைப் பின் கதவு வாயிலாகச் சமையலறைக்கு அழைத்துச் சென்றனர். நான் பில் செலுத்திய பிறகு லாபிக்குச் சென்றிருந்தால், நான் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என இந்தப் பேட்டியில் கௌதம் அதானி தெரிவித்தார்.
தாஜ் ஹோட்டல் ஊழியர்கள்
தாஜ் ஹோட்டலில் உயிருக்கு பயந்து சமையலறையில் பதுங்கியிருந்தோம், அன்று அவர்களுடன் இருந்த தாஜ் ஹோட்டல் ஊழியர்களைப் இந்தப் பேட்டியில் பாராட்டினார், தாக்குதல் நடந்த நேரத்தில் தாஜ் ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பு நிறுவனங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுபவை என்று கௌதம் அதானி கூறினார்.
வாழ்கையை மாற்றியது
கௌதம் அதானி, தனது வாழ்வில் மரணத்திற்கு அருகில் சென்று வந்த இந்த இரண்டு அனுபவங்கள், வாழ்க்கையை முழுமையாக வாழவும், தன் அன்புக்குரியவர்களை மதிக்க வேண்டும் என்ற முக்கியப் புரிதலை அளித்ததாகவும், இது தன் வாழ்வில் பெரிதும் உதவியதாகவும் இப்பேட்டியில் பேசினார் கௌதம் அதானி.