இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தனது வர்த்தகத்தைப் பல துறையில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், முகேஷ் அம்பானியை போல் ரீடைல் வர்த்தகத் துறையில் இறங்கத் திட்டமிட்டு வருகிறார்.
இதற்கான முதல் படியாகப் பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில் தனது ஆன்லைன் டிக்கெட் மற்றும் சுற்றுலா தளமான கிளியர்டிரிப் நிறுவனத்தைக் கைப்பற்றியது. இந்த நிறுவனத்தில் தான் தற்போது கௌதம் அதானி முதலீடு செய்ய உள்ளார்.
கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப் ஆன்லைன் ரீடைல் வர்த்தகப் பிரிவில் நுழைய வேண்டும் என்பதற்காகக் கிளியர்டிரிப் நிறுவனத்தில் மிகவும் குறைந்த அளவிலான பங்குகளைக் கைப்பற்ற இரு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பங்கு பரிவர்த்தனை நவம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் ரீடைல் சந்தை
இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் நிர்வாகக் குழுவில் பெரிய அளவிலான ஆதிக்கம் இல்லாவிட்டாலும் ஆன்லைன் ரீடைல் சந்தை குறித்த புரிதலை நிர்வாக அளவில் இருந்து பெற முடியும் என்பது மட்டும் அல்லாமல் வரும் காலத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
விமானப் பயணிகள்
சமீபத்தில் அதானி குரூப் அதிகளவிலான விமான நிலையங்களைக் கைப்பற்றி இருக்கும் வேளையில் இத்துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது. கொரோனா தொற்றுக்குப் பின்பு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ள வேளையில் ஏர்போர்ட் நிர்வாகம் மூலம் அதிக வருமானமும் அதானி குரூப் பெற உள்ளது.
பல சாதகமான வாய்ப்பு
இந்நிலையில் இதனை இணைக்கும் வகையில் தற்போது கிளியர்டிரிப் நிறுவனத்தின் செய்யப்பட்ட முதலீடு வர்த்தகத்தை நிலையாக வைக்க உதவும். உதாரணமாக விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறையும் நேரத்தில் அதானி குழுமம் வாயிலாகக் கிளியர்டிரிப் வாயிலாகச் சலுகைகள் கொடுத்துப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இப்படிப் பல சாதகமான வாய்ப்பு உள்ளது.
பிளிப்கார்ட் திட்டம்
இந்திய ஆன்லைன் ரீடைல் சந்தையில் அமேசான் உடனும் புதிதாக வந்துள்ள ஜியோ மற்றும் வரப்போகும் டாடா ஆகிய நிறுவனங்களைச் சமாளிக்க பிளிப்கார்ட் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பல துறையில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே கிளியர்டிரிப் நிறுவனத்தைச் சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. இதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பல 2ஆம் தர நகரங்களில் fulfillment center-களை உருவாக்கி வருகிறது.
வால்மார்ட்
பிளிப்கார்ட் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்குகிறது. இந்தியாவில் நேரடியாக இறங்க முடியாத வால்மார்ட், அமேசான் ஆதிக்கத்தைக் குறைக்கவும், இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் பிளிப்கார்ட் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது வால்மார்ட்.