ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் அடுத்தடுத்து நிறுவனங்களை வாங்க முயற்சி செய்து வரும் நிலையில், கௌதம் அதானி இந்த முறையில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் தேவை மிகவும் முக்கியம் என்பதால் கௌதம் அதானி மின்சாரத் துறையில் உற்பத்தி, விநியோகம், பகிர்மானம், மின்சார மீட்டர் வரையில் அனைத்து துறையிலும் இறங்கியுள்ளது.
இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் PTC இந்தியா என்னும் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Disinvestment இலக்கு
மத்திய அரசு தனது Disinvestment இலக்கை அடைய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது PTC இந்தியா நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகள் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை வாங்கவே தற்போது கௌதம் அதானி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
PTC இந்தியா
PTC இந்தியா லிமிடெட் முன்பு பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. PTC இந்தியா நிறுவனம் பவர் டிரேடிங் சொல்யூஷன்ஸ், எல்லை தாண்டிய மின் வர்த்தகம் மற்றும் கன்சல்டன்சி சேவைகளை வழங்கும் ஒரு அரசு நிறுவனமாகும்.
வெளிநாடுகள்
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் PTC இந்தியா நிறுவனம் நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் நாட்டிலும் செயல்படுகிறது.
துணை நிறுவனங்கள்
PTC இந்தியாவின் துணை நிறுவனங்களான PTC India Financial Services Limited மற்றும் PTC Energy Limited ஆகியவை மின்சாரத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குகின்றன மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை இயக்குகின்றன.
தலா 4 சதவீத பங்குகள்
இந்த நிலையில் PTC இந்தியாவின் பங்குகளை அதானி குழுமம் வாங்க திட்டமிட்டு வருகிறது, இந்தப் பங்கு விற்பனையில் பிற அரசு நிறுவனங்களான NTPC, NHPC, பவர் கிரிட் கார்ப், பவர் பைனான்ஸ் கார்ப் ஆகியவை தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் PTC இந்தியா பங்குகளில் தலா 4 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஆலோசனை செய்து வருகிறது.
அதானி டிரான்ஸ்மிஷன்
இந்தியாவின் எனர்ஜி துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் முக்கிய உதவியாக இருக்கும். அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் மூலம் மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகச் சேவைகள், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் டிரேடிங் மூலம் இந்தியாவின் எரிசக்தித் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அண்டை நாடுகள்
சமீபத்தில் அதானி குழுமம் இந்தியாவில் தயாரிக்கும் மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு அளிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் இதில் PTC இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
அறிவிப்பு வெளியாகவில்லை
PTC இந்தியா பங்குகள் விற்பனை குறித்து அதன் தாய் நிறுவனங்களான NTPC, NHPC, பவர் கிரிட் கார்ப், பவர் பைனான்ஸ் கார்ப் ஆகியவை தலா 4 சதவீத பங்குகளை விற்பனை செய்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராத நிலையில் ப்ளூம்பெர்க் இந்தத் தகவல்களை அளித்துள்ளது.
PTC இந்தியா பங்கு
PTC இந்தியா பங்கு மதிப்பு கடந்த 12 மாதத்தில் 23.1 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் மூலம் PTC இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 301 மில்லியன் டாலராக மட்டுமே உள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.