உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 99.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் இல்லாமல், குஜராத்தில் மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்.
இது மட்டும் அல்லாமல் ஓரே திட்டத்தில் ஆதித்யா பிர்லா குரூப்-ன் ஹீண்டால்கோ மற்றும் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தை ஓரம் கட்ட போகிறார் கௌதம் அதானி. ஹீண்டால்கோ தான் இந்தியாவின் மிகப்பெரிய காப்பர் உற்பத்தி நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானி
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர் ஆக விளங்கும் கௌதம் அதானி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் (எம்டிபிஏ) தாமிர ஆலை அதாவது காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார்.
6,071 கோடி ரூபாய் கடன்
இந்த முக்கியமான திட்டத்தின் முதல் கட்டத்திற்கு (அதாவது 0.5MTPA உற்பத்தி திறன் கொண்ட கட்டமைப்பு) நிதியளிப்பதற்காகக் கௌதம் அதானி சுமார் 6,071 கோடி ரூபாய் அளவிலான கடனைத் திரட்டியுள்ளார். இந்தக் கடனை எஸ்பிஐ தலைமையிலான வங்கி வழங்கியுள்ளது.
அனில் அகர்வால்
இந்திய உலோக துறையில் முக்கியத் தொழிலதிபரான அனில் அகர்வால் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக அறிவித்து யாராவது வாங்குவார்களா எனத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் கௌதம் அதானி குஜராத்தில் புதிய காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளார்.
காப்பர் தொழிற்சாலை
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து வெளியான தகவல் படி குஜராத்தில் அமைக்கப்படும் இந்தப் புதிய காப்பர் தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்புத் தளத்தில் முதன்மையாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இப்புதிய தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ஸ்டெர்லைட் தொழிற்சாலை
அனில் அகர்வால் தலைமை வகிக்கும் வேதாந்தா குழுத்திற்குச் சொந்தமான தமிழ்நாடு ஸ்டெர்லைட் தொழிற்சாலை, 2018 ஆம் ஆண்டு முதல் மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ள காரணமாக மூடப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து தான் இந்தியாவின் 40% காப்பர் தேவைகளைப் பூர்த்திச் செய்யப்பட்டு வந்தது.
வர்த்தக விரிவாக்கம்
பொதுவாகக் கௌதம் அதானி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடும் போது சக போட்டி நிறுவனங்களையோ, அல்லது அத்துறையில் இருக்கும் 2வது அல்லது 3வது நிறுவனத்தை நல்ல விலை கொடுத்து வாங்கிப் பெயரை மாற்றித் தனதாக்கிக் கொள்வது தான் வழக்கம்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை
ஆனால் தற்போது தமிழ்நாடு ஸ்டெர்லைட் தொழிற்சாலை விற்பனை செய்வதாக அறிவித்த பின்னரும், தமிழ்நாட்டில் 40 சதவீத காப்பர் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிலான உற்பத்தி திறன்களைக் கொண்டுள்ள ஒரு நிறுவனத்தைக் கௌதம் அதானி வாங்க விருப்பம் காட்டாமல் உள்ளார்.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி குழுமத்திற்கான புதிய வணிக முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில் அதானி எண்டர்பிரைசஸ் காப்பர் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் துறையில் இறங்க வேண்டும் என்பதற்காக மார்ச் 24, 2021 அன்று கட்ச் காப்பர் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கியது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்த நிறுவனத்தின் வாயிலாக மின்சார வாகனங்கள் (EVகள்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், கேபிள்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் காப்பர் பொருட்களைத் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.