இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானி தலைமையிலான அதானி சிமெண்ட் கைப்பற்றியுள்ளது.
இந்த நிறுவனத்தைக் கைப்பற்ற ஜின்டால், அல்ட்ராடெக் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்ட நிலையிலும் கௌதம் அதானி மிகப்பெரிய தொகையைக் கொடுத்துக் கைப்பற்றியுள்ளார்.
அதானி குழுமம்
கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம் பல பிரிவுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக அதானி சிமெண்ட் என்னும் நிறுவனத்தை உருவாக்கியது.
இப்பிரிவில் இருக்கும் சிறு நிறுவனங்களைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தைக் கட்டமைக்கும் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் மிகப்பெரிய நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஹோல்சிம்
சுவிஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹோல்சிம் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனத்தையும் விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்தது.
அதானி சிமெண்ட்
இதை மிகப்பெரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட அதானி குழுமம் (அதானி சிமெண்ட்) ஜின்டால், அல்ட்ராடெக் போன்ற முன்னணி நிறுவனங்களை ஓரம்கட்டிவிட்டு சுமார் 10.5 பில்லியன் டாலருக்கு வருடம் 66 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
10.5 பில்லியன் டாலர் டீல்
அதானி சிமெண்ட் மற்றும் ஹோல்சிம் நிறுவனங்கள் மத்தியில் நடந்த 10.5 பில்லியன் டாலர் டீல் தான் இந்திய இன்பரா மற்றும் மெட்டிரீயல் பிரிவில் இதுவரையில் நடந்த மிகப்பெரிய வர்த்தகமாக உள்ளது. ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவின் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உள்ளது.
ஹோல்சிம் சிஇஓ
"அதானி குழுமம் அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்தியாவில் எங்கள் வணிகத்தைக் கையகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று ஹோல்சிம் நிறுவனத்தின் சிஇஓ ஜான் ஜெனிஷ் கூறினார்.
கௌதம் அதானி
இந்தியாவின் வளர்ச்சியில் நமது நம்பிக்கை அசைக்க முடியாதது. ஹோல்சிம் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளோம். கிரீன் எனர்ஜி மற்றும் தளவாடங்களுடன் சிமெண்ட் சொத்துக்களின் இணைப்பு மூலம் நம்மை உலகின் பசுமையான சிமெண்ட் நிறுவனமாக அதானி சிமெண்ட் மாற்றும் என கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.