இந்தியாவின் இரு பெரும் வணிகர்களான அதானியும், அம்பானியும் போட்டி போட்டுக் கொண்டு வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றனர். முதலீடுகளை அடுத்தடுத்து அதிகரித்து வருகின்றனர். புது புது துறையாக காலடி எடுத்து வைத்து வருகின்றனர்.
மொத்தத்தில் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தங்களது முதலீடுகளை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.
அதானி வில்மர் ஏற்கனவே சமயலறை பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக உள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தனது சில்லறை வணிகத்தினை பெரியளவில் விரிவாக்கம் செய்து வருகின்றது.
நுகர்வோர் பொருட்களில் கவனம்
குறிப்பாக தற்போது உணவு பொருட்கள் வணிகத்தில் இருபெரும் சாம்ராஜ்ஜியமும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. கடந்த வாரத்தில் தான் முகேஷ் அம்பானி தனது நுகர்வோர் பொருட்கள் வணிகம் குறித்தான, புதிய அறிவிப்பினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது அதானியும் விரிவாக்க திட்டத்தினை கையில் எடுத்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனம் கையகப்படுத்தல்
தனது நுகர்வோர் பொருட்கள் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தும் திட்டத்தினை கையில் எழுத்துள்ளது அதானி குழுமம்.
இது குறித்து அதானி வில்மரின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான அங்ஷு மல்லிக், நாங்கள் எங்களது நுகர்வோர் பொருட்களை மக்களுக்கு சென்றடைய, சில வெளிநாட்டு பிராண்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளோம். இதனை மார்ச் மாதத்திற்குள் கையகப்படுத்தலாம் என கூறியுள்ளார்.
அதானி வில்மர் நிதி ஒதுக்கீடு
இந்த விரிவாக்க திட்டங்களுக்கு நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 5 பில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டில் 30 பில்லியன் ரூபாய் திட்டமிடப்பட்ட மூலதன செலவினங்களில் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 மடங்குக்கும் மேல் ஏற்றம்
அதானி வில்மர் பங்கு விலையானது பிப்ரவரியில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதானி குழுமம் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், 400 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் உணவு உற்பத்தி வணிகத்தில் முக்கிய பங்கினை பிடிக்க முயற்சி செய்து வருவதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.
கோஹினூர் பிராண்ட்
அதானி வில்மர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து பிரபல சமையல் பிராண்டான கோஹினூர் பிராண்டை வாங்கியது. கோஹினூரின் பிரபலமான பாசுமதி அரிசிக்கு இந்தியாவில் நுகர்வு அதிகம். இந்த கையகப்படுத்தலின் மூலம் பாசுமதி அரிசி மட்டும் அல்ல பல அரிசி பிராண்டுகளை கையகப்படுத்தியது.
இது மட்டும் அல்லது கடந்த ஆண்டில் மட்டும் 17 பில்லியன் டாலர் மதிப்பிலான 32 நிறுவனங்களை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி
சமீபத்தில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் மூலம், மலிவு விலையில் உயர்தர தயாரிப்புகளை வழங்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தனது பங்குக்கு தனது வணிகத்திலும் விரிவாக்க பணிகளை அறிவித்துள்ளார் கெளதம் அதானி.
தற்போதைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் அதானி வில்மரின் பங்கின் விலையானது 0.59% அதிகரித்து, 712.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 716.85 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 708.05 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 0.54% அதிகரித்து,712.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 716 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 708.50 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 878.35 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 221 ரூபாயாகவும் உள்ளது.