இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல விஷயங்களை சமர்பிக்கவும், ரெனீவ் செய்யவும் கால அவகாசத்தை நீட்டித்து இருக்கிறது மத்திய அரசு.
உதாரணமாக, தனி நபர்கள் வருமான வரி செலுத்துவது மற்றும் வருமான வரிப் படிவங்களைச் சமர்பிப்பதறகான கடைசி தேதியை நவம்பர் 30, 2020 வரை நீட்டித்து முறையாக அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம் (Ministry of Finance).
அதே போல, ஒட்டுநர் உரிமம், வாகனங்களுக்கான ஃபிட்னெஸ் சான்றிதழ், உரிமங்கள், பதிவுச் சான்றிதழ்கள்... போன்ற ஆவணங்களைப் புதுப்பிக்க, மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) 31 டிசம்பர் 2020 வரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறது.
ஆனால் வாகனங்களுக்கான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகள் தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், எதையும் குறிப்பிடவில்லை.
ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் (General Insurance Council) என்கிற அமைப்பு, இன்சூரன்ஸ் சட்டம் 1938-ன் கீழ் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பிரதிநிதியாக இருக்கிறது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் ரெனிவல் தொடர்பாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் (General Insurance Council) தெளிவுபடுத்தி இருக்கிறது.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Road Transport and Highways), கடந்த 24 ஆகஸ்ட் 2020 அன்று வெளியிட்ட கடிதத்தில், வாகனங்கள் தொடர்பான டாக்குமெண்ட்களின் (ஃபிட்னெஸ் சான்றிதழ், உரிமங்கள், ஓட்டுநர் உரிமங்கள், ஆர் சி...) வேலிடிட்டியைப் பற்றித் தான் பேசி இருக்கிறது. வாகன இன்சூரன்ஸ் தொடர்பாக எதையும் சொல்லவே இல்லை.
எனவே வாகனங்களை வைத்திருப்பவர்கள், தங்கள் வாகனங்களுக்கான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளை முறையாக நீட்டித்துக் கொள்வது நல்லது என ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் தெளிவுபடுத்தி இருக்கிறது.
வாகனங்களுக்கான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை, மக்கள் வீட்டில் இருந்து கொண்டே, ஆன்லைனில் ரெனிவ் செய்துவிடலாம். இந்த இன்சூரன்ஸ் வேலைக்காக அலைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
பல விஷயங்களுக்கு விலக்கு மற்றும் கால நீட்டிப்பு கொடுத்து இருக்கும் மத்திய அரசு, இந்த விஷயத்துக்கும் கொஞ்சம் கால நீட்டிப்பு வழங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.