வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளை டார்கெட் செய்தாலும், ஐரோப்பிய யூனியனின் பொருளாதார இன்ஜின் ஆக விளங்கும் ஜெர்மனியில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புக் கொடிக்கிடக்கிறது.
கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் இருந்து ஜெர்மனி-க்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் பல்வேறு காரணங்களுக்காக ஜெர்மனி நாட்டிற்குப் புலம்பெயர்ந்தோருக்கு முக்கியமான அறிவிப்பை அந்நாட்டில் அறிவித்துள்ளது.
ஜெர்மனி தற்போது தனது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகப் புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதில் மிகப்பெரிய தளர்வை அறிவித்துள்ளது.
ஜெர்மனி குடியுரிமை
ஜெர்மனி நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பல ஆயிரம் புலம்பெயர்ந்தோருக்கு (Migrants) அந்நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கு முக்கியமான நடவடிக்கையை எடுக்க சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்தது.
மசோதா
இந்த முடிவை தொடர்ந்து புதன்கிழமை இதற்கான மசோதாவை ஜெர்மனி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இப்புதிய மசோதா படி ஜனவரி 1, 2022 ஆம் தேதி படி 5 வருடம் ஜெர்மனியில் வசித்து வரும் 1,36,௦௦௦ புலம்பெயர்ந்தோருக்கு (Migrants) அந்நாட்டின் குடியுரிமை பெற தகுதியானவராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ரெசிடென்சி ஸ்டேட்டஸ்
மேலும் தற்போது தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் முதலில் ஒரு வருட ரெசிடென்சி ஸ்டேட்டஸ் பெறுவதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அதைத் தொடர்ந்து ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப பணிகளைத் துவங்க முடியும்.
குடியுரிமை விண்ணப்பம்
ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பம் செய்வோர் யாருடைய துணையும் இல்லாமல் அந்நாட்டில் வாழ்வதற்கான பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். இதேபோல் ஜெர்மன் மொழி சரளமாகப் பேசக்கூடிய திறன் வேண்டும், இதேபோல் விண்ணப்பதாரர் அந்நாட்டு மக்கள் உடன் இணைந்து வாழத் தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
27 வயது வரம்பு
இதேபோல் 27 வயதுக்குக் கீழ் உடையோர் ஜெர்மனியில் 3 வருடம் வாழ்ந்திருந்தாலே குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி உள்துறை அமைச்சர்
ஜெர்மனி நாட்டின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நம்முடைய நாட்டில் நல்ல வாய்ப்புகளை ஜெர்மனி உடனும், ஜெர்மனி மக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு அளிக்க விரும்புகிறோம்.
விளக்கம்
இந்த வழியில், நாங்கள் ஏற்கனவே ஜெர்மனி மக்களின் ஒரு பகுதியாக மாறிவிட்ட வெளிநாட்டு மக்களுக்கு அதிகாரத்துவம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குடியுரிமை வழங்குவதில் தளர்வுகளை அளித்துள்ளோம் என நான்சி ஃபேசர் கூறியுள்ளார்.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்
ஜெர்மனியில் ஐடி மற்றும் டெக் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவம், உற்பத்தி, ஆட்டோமொபைல் எனப் பல முக்கியத் தொழில்நுட்ப துறையில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதனால் புலம்பெயர்ந்தோருக்கு மட்டும் அல்லாமல் பட்டதாரிகளுக்கும் மகிப்பெரிய வாய்ப்புகள் தற்போது ஜெர்மனியில் உள்ளது.