உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் நிலையில், உலக நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை எப்படி முறைப்படுத்துவது..? எப்படிக் கையாளுவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
ஆனால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்யவும், கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்ட விதிகளைக் கொண்ட கிரிப்டோகரன்சி மசோதாவை அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தடை
மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை இந்தியாவில் தடை செய்யவும், ஏற்கனவே இதில் முதலீட்டு செய்துள்ளவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் படி கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடை விதிக்கும் முன், இதில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களுக்கு இதில் இருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அப்படி வெளியேறும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மீது அபராதமும் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கிரிப்டோகரன்சி மசோதா
கிரிப்டோகரன்சி மசோதா முழுமையாக முடிவு பெறாத நிலையில், கிரிப்டோ முதலீட்டாளர்கள் தாங்கள் செய்துள்ள முதலீட்டை எப்படி முறையாக விற்பனை செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதற்கான வழிமுறை அல்லது சட்ட விதிகள் இந்த மசோதாவில் கண்டிப்பாக இடம்பெறும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சி
இதேபோல் ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ள படி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான ப்ரோம்வொர்க் இந்த மசோதாவில் கண்டிப்பாக இடம் பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் Digital Currency Bill 2021 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
சிறை, அபராதம் தண்டனை
இந்தப் புதிய டிஜிட்டல் கரன்சி மசோதாவில் கிரிப்டோகரன்சியை உருவாக்குவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது, வெளியிடுவது, பரிமாற்றம் செய்வது, பயன்படுத்துவது என அனைத்தும் குற்றச்செயலாக அறிவிக்கப்பட உள்ளதாகவும், இதை மீறுவோருக்கு அதிகப்படியான தொகை அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் கடுமையான சட்டமும் இந்த மசோதாவில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
தனியார் கிரிப்டோகரன்சி
மேலும் இந்தியாவில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சியும் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனச் சில வாரங்களுக்கும் முன்பு வெளியானதைத் தொடர்ந்து தான் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பிலான புதிய கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்தியாவில் முதலீட்டு அளவு வளர்ச்சி
மேலும் இந்தியாவில் கடந்த வருடம் கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டு அளவு வெறும் 5 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2020ல் இதன் அளவீடு 24 மில்லியன் டாலராக உயர்ந்தது. இதேவேளையில் இந்த வாரம் டெஸ்லாவின் பிட்காயின் முதலீடு குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்திய கிரிப்டோ வர்த்தகத் தளத்தில் டெபாசிட் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்தது.