இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மூன்லைட்டிங்-ஐ கடுமையாக எதிர்த்து வரும் இதே வேளையில் கிக் ஊழியர்கள் அதாவது பகுதி நேர, கான்டிராக்ட் ஊழியர்கள், ப்ரீலான்சர் ஊழியர்களுக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கிக் ஊழியர்கள் பிரிவில் மாதம் 1,50,000 ரூபாய் வரையிலான வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கிக் ஊழியர்கள்
இந்தியாவில் பகுதி நேர, கான்டிராக்ட் ஊழியர்கள், ப்ரீலான்சர் ஊழியர்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இது மட்டும் அல்லாமல் இப்பிரிவு ஊழியர்களின் சம்பளம் கடந்த ஒரு வருடத்தில் 153 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக டிஜிட்டல் நிதி சேவை அளிக்கும் ரேசர்பே நிறுவனத்தின் RazorpayX Payroll ரிப்போர்ட் கூறுகிறது.
153% வரை சம்பள உயர்வு
முழுநேர வேலையில் இருக்கும் பல கோடி மக்கள் ஒவ்வொரு வருடமும் 10 - 15 சதவீதம் வரையிலான சம்பள உயர்வைப் பெறுவதற்குப் போராடி வரும் நிலையில் Gig ஊழியர்கள் பிரிவில் இருக்கும் பகுதி நேர, கான்டிராக்ட் ஊழியர்கள், ப்ரீலான்சர் ஊழியர்கள் 153 சதவீதம் அதிகச் சம்பளம் பெறுகின்றனர் என்பது வியக்கவைக்கும் ஒன்றாக உள்ளது.
வளர்ச்சி
இந்தியாவில் கிக் ஊழியர்கள் பிரிவில் இருப்போர் மாதம் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் 150000 - 85000 வரையிலான சம்பளம் பெறுவோர் எண்ணிக்கை 62 சதவீதமும், 20000 - 40000 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை 52 சதவீதமும், 20000 ரூபாய்க்குக் கீழ் சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஸ்டார்ட்அப்
கிக் ஊழியர்கள் பிரிவில் ஐடி வேலை செய்பவர்கள் முதல் புட் டெலிவரி செய்பவர்கள் வரையில் இருப்பவர்கள், சமீபத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், செலவுகளைச் சமாளிக்க அதிகப்படியான ப்ரீலான்சர்களைப் பணியில் சேர்த்து வருகின்றனர். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சேரும் கிக் ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஊழியர்கள் சேர்க்கை எண்ணிக்கை
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் அக்டோபர் 2021 முதல் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, குறிப்பாக உயர் மட்ட பிரிவு ஊழியர்கள், CXO பிரிவு ஊழியர்கள் சேர்க்கை எண்ணிக்கை 93 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
சம்பளத்திற்கான செலவுகள்
ஊழியர்கள் சேர்க்கை குறைந்தாலும், சம்பளத்திற்கான செலவுகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து மட்டத்திலும் ஊழியர்களின் சம்பளம் சராசரியாக 12 சதவீதம் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது.
பாலின சம்பள பாகுபாடு
இதோடு பாலின சம்பள பாகுபாடு அளவு 29 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையைப் பார்க்கும் போது முழு நேர பணிகளை விடவும் கிக் பிரிவில் அதிகம் சம்பாதிக்க முடியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூன்லைட்டிங் செய்வதை எதிர்க்கும் நிலையில், டெக் மஹிந்திரா மட்டும் ஆதரவு அளிப்பதாகவும் விரைவில் கொள்கை திருத்தத்தை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.