உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ஏற்கனவே பல்வேறு உலோகங்கள, எரிபொருள், தானியங்கள், சமையல் எண்ணெய் என பலவும் விலை உச்சத்தினை எட்டியுள்ளது.
இதற்கிடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா தனது நிதிகளை நிர்வகிப்பதில் சிறப்பாக இருந்து வருகின்றது. ஆனால் சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டு வருவது, இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.
ஏன் இந்தியாவுக்கு பாதிப்பு?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஜார்ஜீவா உக்ரைன் ரஷ்யா பிரச்சனை உலகளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.
இந்தியா தனது எரிசக்தி தேவைகளில் பெரும்பான்மையானவற்றை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது. ஆக அதிகரித்து வரும் விலைவாசியானது அதன் பொருளாதார வளர்ச்சியினை பாதிக்கும் என்று விளக்கமளித்துள்ளார்.
இதில் கவனம் செலுத்துங்கள்
ஆக இந்த நெருக்கடியான நிலையில் இருந்து தப்பிக்க, மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எங்கள் உறுப்பினர்களுக்கு நாங்கள் சொல்லும் முதன்மை அறிவுரை, அதிகரித்து வரும் விலைவாசியில் இருந்து மக்களை பாதுக்காக்க வேண்டும் என்பது தான்.
உணவு பொருட்கள் விலையும் அதிகரிப்பு
இது எரிபொருள் விலை மட்டும் அல்ல, உணவு பொருட்கள் விலை அதிகரிப்பில் இருந்தும், மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இதே IMF-ன் முதல் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபி நாத், இந்தியா உட்பட உலகளவில் பலவேறு நாடுகளின் பொருளாதாரத்தினை, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
பணவீக்க அச்சம்
மேலும் இந்தியா பெரும்பாலும் தனது பயன்பாட்டில் இறக்குமதி செய்தே பயன்படுத்துவதால், அதிகரித்து வரும் விலைவாசி இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனை பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் பணவீக்கம் 6% அருகில் உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு மேலாக உள்ளது. ஆக அதிகரித்து வரும் விலைவாசி என்பது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்க கூடும் என்றும் கீதா எச்சரித்துள்ளார்.
சங்கிலித் தொடராக பிரச்சனைகள்
உண்மையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் இது லாகிஸ்டிக்ஸ் செலவுகளை கூட்டலாம். இது அனைத்து துறையிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக சில்லறை விற்பனையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் மக்களின் நுகர்வும் குறையலாம். மொத்தத்தில் சங்கிலித் தொடராக இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்பதில் சந்தேகமில்லை.