உலகில் பல தரப்பு மக்களுக்கும் தங்கத்தின் மீது அளப்பரிய காதல் இருக்கிறது. குறிப்பாக நம் தமிழர்களுக்கு நிறையவே இருக்கிறது.
இந்த தங்கம் மீதான காதலால், அவ்வப் போது தங்கம் குறித்த புரளிகள் வந்து ஒட்டு மொத்த மக்களையும் வியப்படையச் செய்ததை நாம் பார்த்து இருக்கிறோம்.
சமீபத்தில், உத்திரப் பிரதேசத்தில் சுமாராக 3,000 டன் தங்கம் இருப்பதாக வந்த வதந்தி ஒரு உதாரணம். இப்போதும் அதே மாதிரி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்து இருக்கிறது. தி நியூஸ் மினிட் இந்த செய்தியை குறித்து தங்கள் வலைதளத்தில் பிரசூரித்து இருக்கிறார்கள். அதைத் தான் இங்கு விரிவாக பார்க்கப் போகிறோம்.
பாகலூர் பகுதி
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், கடந்த வெள்ளிக்கிழமை (9 அக்டோபர் 2020) மாலை, பாகலூர் - சார்ஜாபூர் சாலையைக் கடக்கும் போது, சாலை ஓரத்தில், மண் பகுதியில் என்னமோ மின்னுவது போலத் தெரிந்து இருக்கிறது. எடுத்துப் பார்த்தால், சட்டை பட்டன் அளவுக்கு மிகாமல், தங்க நிறத்தில் காசுகள்.
வதந்தி
அவ்வளவு தான் "பாகலூர் சாலை ஓரத்தில் தங்கம் இருக்கு" என யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். இந்த செய்தி உண்மையா பொய்யா என எதையும் யோசிக்காமல், கொரோனா வைரஸ், மாஸ்க், சமூக விலகல் போன்றவைகளை எல்லாம் மறந்து, மக்கள், சாலை ஓரங்களில், தங்க நிற காசுகளை தேடத் தொடங்கிவிட்டார்கள்.
மக்கள் கூட்டம்
இந்த வதந்தியை உண்மை என நம்பி நூற்றுக் கணக்கானவர்கள் சாலைக்கு வந்துவிட்டார்களாம். மெல்ல மக்கள் கூட்டம் அதிகரித்து, சாலை போக்குவரத்தே பாதிக்கப்படும் அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த அறிபறிகளுக்கு மத்தியிலும், அடித்துப் பிடித்து மக்கள் சுமாராக 40 தங்க நிற காசுகளை எடுத்து இருந்தார்களாம்.
அரசு தரப்பு
இந்த விஷயம் காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்து இருக்கிறது. பாகலூர் தாசில்தார் மற்றும் பாகலூர் காவல் ஆய்வளர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து இருக்கிறார்கள். அப்போது தான் மக்கள் எடுத்தது தங்க காசுகள் அல்ல, அது தங்க முலாம் பூசப்பட்ட காசுகள் எனத் தெரிய வந்து இருக்கிறது.
எவ்வளவு தங்கம்
மக்கள் போராடி, எடுத்த காசுகளில் 10 சதவிகிதம் கூட தங்கம் இல்லை என பாகலூர் காவல் துறையினர் சொல்லி இருக்கிறார்கள். யாரோ ஒரு விஷமி கிளப்பிவிட்டதை நம்பி, மக்கள் தங்கள் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தங்க நிற காசுகளை எடுக்க சாலைக்கு வந்ததைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.
கலைந்து போங்க
இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவிக் கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில், மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கக் கூடாது என, காவலர்கள் பேசி அனைவரையும் கலைந்து போகச் சொல்லி இருக்கிறார்கள். மேற்கொண்டு புதிதாக மக்கள், அந்த பகுதிக்கு வராமல் இருக்க, காவலர்கள் கடும் நடவடிக்கை எடுத்து மக்கள் கூட்டத்தைக் கலைத்து இருக்கிறார்கள். அதோடு தங்க நிற காசுகள் கிடைப்பதாகச் சொன்ன பகுதியில் மண்ணைக் கொட்டி இருக்கிறார்களாம்.