ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷ்யா மீது கடுமையான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களும் அடுத்தடுத்துத் தடை விதித்தும், ரஷ்யாவை விட்டு வெளியேறியும் வந்தது.
இந்நிலையில் அமெரிக்க வங்கிகளும் தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் மற்றும் நிதி வர்த்தகத்தை விட்டுவிட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது.
இதன் படி அமெரிக்காவின் இரு முக்கிய வங்கிகள் ரஷ்யாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க வங்கி
கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் & கோ ஆகியவை வியாழனன்று தங்கள் ரஷ்யா உடனான வர்த்தகத்தை மொத்தமாகத் துண்டிப்பது மட்டும் அல்லாமல் அனைத்து அலுவலகத்தையும் மொத்தமாக மூடிவிட்டு வெளியேறுவதாக அறிவித்தன.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யாவின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதை அடுத்து வெளியேறும் முதல் பெரிய அமெரிக்க வங்கிகளாகக் கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் & கோ விளங்குகிறது. இதன் மூலம் பிற அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் வெளியேற அழுத்தம் உருவாக்கியுள்ளது.
14.7 பில்லியன் டாலர்
ஐரோப்பிய வங்கிகள் ரஷ்யாவில் பல பிரிவுகளில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை வைத்திருக்கும் நிலையில், அமெரிக்க வங்கிகள் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை மட்டுமே வைத்துள்ளது. பாங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் தரவுகளின்படி, அமெரிக்க வங்கிகள் ரஷ்யா உடன் சுமார் 14.7 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை மட்டுமே வைத்துள்ளது.
காரணம்
கோல்ட்மேன் சாக்ஸ் ரஷ்யாவில் ஒழுங்குமுறை மற்றும் உரிமத் தேவைகளுக்கு இணங்க அதன் வணிகத்தை முடித்துக் கொள்வதாகவும், ஜேபி மோர்கன் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் உத்தரவுகளுக்கு இணங்க, நாங்கள் ரஷ்ய வர்த்தகச் சந்தையை விட்டு வெளியேறி வருகிறோம் எனவும் இரு வங்கிகளும் விளக்கம் அளித்துள்ளது.
துபாய்
உக்ரைன் நாட்டில் கடந்த மாதம் ரஷ்யாவின் போர் தொடுத்த பின்பு, மாஸ்கோவில் உள்ள கோல்ட்மேன் சாக்ஸ் ஊழியர்களில் பாதிப் பேர் துபாய்க்கும், அமெரிக்காவிற்கும் இடம் பெயர்ந்துள்ளனர். கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியின் மாஸ்கோ அலுவலகத்தில் மட்டும் சுமார் 80 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
சிட்டி பேங்க்
கோல்ட்மேன் சாக்ஸ் ரஷ்யாவில் வெறும் 650 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை மட்டுமே வைத்துள்ள நிலையில், சிட்டி பேங்க் வங்கி ரஷ்யாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது. தற்போது ரஷ்யாவின் போர் மற்றும் அமெரிக்காவின் தடை மூலம் சிட்டிபேங்க் குரூப் 5 பில்லியன் டாலர் வரையில் இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.