சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் 2022ம் ஆண்டினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. பல பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி, சிறு நிறுவனங்கள் வரையில் பலவும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தன. இந்த பணி நீக்க நடவடிக்கையால் பற்பல ஆயிரம் ஊழியர்கள் தங்களது வேலையினை இழந்து தவித்தனர்.
ஆக பலருக்கும் 2022 போராட்டமான ஒரு காலமாகத் தான் இருந்தது எனலாம். அப்பிரச்சனையானது அத்தோடு முடிந்து விட்டதா? எனில் நிச்சயம் இல்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. பற்பல நிறுவனங்களும் பணி நீக்கம் குறித்தான அறிவிப்பினை மீண்டும் வெளியிட்டு வருகின்றன.
மீண்டும் பணி நீக்கம்
கடந்த ஆண்டே பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்ட சர்வதேச நிதி நிறுவனமான கோல்டுமேன் சாச்ஸ், மீண்டும் நடப்பு ஆண்டில் தனது பணி நீக்க நடவடிக்கையினை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையில் நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
3200 பேர் பணி நீக்கமா?
எனினும் கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
இந்த பணி நீக்க நடவடிக்கையில் சுமார் 3000 மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று வெளியான ப்ளூம்பெர்க் தகவல் சுமார் 3200 பேர் பணி நீக்கம் செய்ய திட்டமிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
வங்கித் துறையில் பாதிப்பு
கோல்டுமேன் நிறுவனத்தின் இந்த பணி நீக்கமானது வங்கித் துறையில் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் கார்ப்பரேட் நடவடிக்கைகள் மெதுவாகியுள்ளன. இதன் காரணமாக இந்த நிறுவனம் பெரும் சரிவினைக் எதிர்கொண்டுள்ளது.
செலவு குறைப்பு நடவடிக்கை
தொடர்ந்து நஷ்டத்தினை கொடுத்து வரும் இதன் நுகர்வோர் வணிகத்திலும் இந்த பணி நீக்கம் என்பது இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்ந்து அதன் வணிக நடவடிக்கையானது சுருங்கி வரும் நிலையில், நஷ்டத்தினை குறைக்கவும் இந்த செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இது உண்மையா?
நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து எந்த கருத்தினையும் தெரிவிக்க மறுத்துள்ளார். சமீப காலமாகவே இந்த முதலீட்டு வங்கியில் பல துறைகளில் பணியமர்த்தல் என்பது கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் வலுவாக பணியமர்த்தும் திட்டங்களை கொண்டுள்ளது என்கிறது மற்றொரு அறிக்கை.
ஊழியர்களுக்கு கடிதம்
கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றில் இது குறித்து இந்த முதலீட்டு வங்கியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் சாலமன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜனவரி மாதம் புதிய பணி நீக்க நடவடிக்கையினை எடுக்கலாம் என கூறியிருந்தார். இது குறித்து விவாதித்து வருவதாகவும், கவனமாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறியிருந்தார். இதன் காரணமாக ஜனவரி பாதியில் பணி நீக்க நடவடிக்கையானது இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
ஊழியர்கள் கவலை
அதனை மெய்பிக்கும் விதமாக தற்போது கோல்ட்மேன் சாச்ஸின் அறிவிப்பானது வந்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். யாரெல்லாம் பணி நீக்கம் செய்யப்படப்போகிறார்களோ? என்ற பதற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.