கொரோனா காலகட்டத்தில் முடங்கிபோன வேலை சந்தையானது தற்போது மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளது. பற்பல துறைகளிலும் புதிய பணியமர்த்தல் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பல நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சம்பள உயர்வு, பதவி உயர்வு என குதூகலப்படுத்தி வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் இரு முறை சம்பள உயர்வு கூட கொடுத்துள்ளன.
நாட்டில் முதல் கட்ட பரவல் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு மத்தியில், பொருளாதாரம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது. இந்த நிலையில் அப்போது லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். எனினும் தற்போது அந்த நிலை மாறி பணியமர்த்தல் என்பது, பரவலாக பல துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
சம்பள அதிகரிப்பு குறித்து ஆய்வு
எனினும் இந்த கடினமான காலகட்டத்திலும் கூட பல நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக சம்பள அதிகரிப்பினை செய்தன. இந்த நிலையில் நடப்பு ஆண்டினை விட, அடுத்த ஆண்டில் சம்பள விகிதம் இன்னும் அதிகரிக்கும் என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்து முன்னணி தொழில் துறை நிறுவனமான, Aon plc's நடத்திய ஆய்வில் ஊழியர்களை மேலும் குதூகலப்படுத்தும் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சம்பளம் அதிகரிக்கும்
சராசரியாக ஆண்டு சம்பள அதிகரிப்பு என்பது கடந்த 2019ம் ஆண்டில் 9.3% ஆக இருந்த நிலையில், 2021ல் 8.8% ஆக குறைந்துள்ளது. எனினும் இந்த சராசரி விகிதமானது 2022ல் 9.4% ஆக அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதனால் சம்பளதாரர்கள் நடப்பு ஆண்டின், முந்தைய ஆண்டில் பெற்ற சம்பள அதிகரிப்பினை விட, அடுத்த ஆண்டில் அதிகம் பெறுவர் எனலாம்.
யார் யாரிடம் சர்வே?
இந்த சுவாரஸ்யமான ஆய்வானது 39 துறைகளை சேர்ந்த 1,300 நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி நடத்தப்பட்ட ஆய்வில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை கொடுப்பதற்கு ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது என சர்வே அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
சம்பள அதிகரிப்பு அதிகரிக்கும்
நடப்பு ஆண்டில் கிட்டதட்ட 37% நிறுவனங்கள் 8 - 10% சம்பள உயர்வை வழங்கியுள்ளதாக கூறியுள்ள நிலையில், 2022ம் ஆண்டில் இது 43% ஆக அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேபோல நடப்பு ஆண்டில் 10% சம்பள உயர்வினை வழங்கியுள்ள நிறுவனங்கள், அடுத்த 2022ம் ஆண்டில் 24.7% வழங்க திட்டமிட்டுள்ளன.
பெரியளவில் மாற்றம் இருக்காது?
எனினும் மறுபுறம் பூஜ்ஜியம் மற்றும் 0 - 5% சம்பள உயர்வை வழங்கி வரும் நிறுவனங்களின் பங்கினை பொறுத்தவரையில், 2022ல் முறையே 1.1% மற்றும் 4.5% ஆகவும் குறையலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆக சிறிய அளவிலான சம்பள உயர்வினை கொடுக்கும் நிறுவனங்களில் பெரியளவிலான மாற்றம் இல்லை எனலாம்.
எந்த துறையில் அதிக சம்பளம்?
இப்படி சம்பளத்தினை அதிகரிக்கும் நிறுவனங்களில் 2022ம் ஆண்டில், அதிக சம்பள உயர்வு கொண்ட துறைகளில், டெக்னாலஜி, இ-காமர்ஸ் மற்றும் ஐடி துறையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறைந்த சம்பள அதிகரிப்பு செய்யும் துறைகளாக ஹாஸ்பிட்டாலிட்டி, பொறியியல் சேவை மற்றும் எனர்ஜி துறைகளாக இருக்கும்.
ஐடி துறையில் சம்பள உயர்வு
குறிப்பாக ஹைடெக் மற்றும் ஐடி துறையில் 2022ம் ஆண்டில் சராசரியாக 11.2% சம்பள அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இது மற்ற துறைகளை காட்டிலும் அதிகமாகும். இதே சிமெண்ட், எரிசக்தி மற்றும் பொறியியல் வடிவமைப்பு சேவைகள் போன்ற துறைகள் 7.8 - 7.7% சம்பள உயர்வை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் துறையில் முதலீடு
கொரோனா தொற்று நோய் அபாயம் என்பது சந்தையில் இருந்தாலும், வணிக வளர்ச்சியானது மேம்பட்டு வரும் நிலையில், சம்பளமும் அதிகரிக்க தயாராக இருப்பதாக நிறுவனங்கள் ஆய்வில் கூறியுள்ளன. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் வளர்ச்சி வேகத்தினை தக்கவைத்துக் கொள்ள, டிஜிட்டல் துறையில் முதலீடு செய்து வருகின்றன.
தேவை அதிகம்
குறிப்பாக டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை கொண்ட ஊழியர்கள், நடப்பு ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக, மிக அதிகளவிலான சம்பள உயர்வினைக் கண்டுள்ளனர். இந்த போக்கு இன்னும் நீடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏனெனில் திறன் மிகுந்த ஊழியர்களுக்கு சந்தையில் என்றுமே தேவை அதிகம் நிலவி வருகின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அட்ரிசன் விகிதம் அதிகரிப்பு
கொரொனாவின் காரணமாக டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ளது. இதனால் டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களின் அட்ரிசன் விகிதம் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள சம்பள அதிகரிப்பு, புதிய பணியமர்த்தல் என்பது இருக்கலாம் என ஆய்வாளார்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.