உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது விற்பனையை விரைவில் துவங்க திட்டமிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் உற்பத்தியை துவங்காத டெஸ்லா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து தான் கார்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது டெஸ்லா நிறுவனத்திற்குச் சுங்க வரியில் சில சலுகைகளைக் கொடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்துள்ளது மத்திய அரசு.
எலக்ட்ரிக் கார்கள் மீதான வரி
எலக்ட்ரிக் கார்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடமும், நித்தி அயோக் அமைப்பிடம் கோரிக்கை விடுத்த நிலையில், கட்டாயம் முடியாது என பதில் அளித்தது மத்திய அரசு. ஆனால் இதன் பின்பு மத்திய அரசு இந்தியாவில் முதலீடு செய்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை துவங்கினால் வரியில் தளர்வு அளிக்கப்படும் என மறைமுகமாகக் கூறப்பட்டது.
ஓலா பாவிஷ் அகர்வால்
இதைத் தொடர்ந்து ஓலா நிறுவனம் தனது இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடும் விழாவில், ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் இந்தியாவில் இறக்குமதி வரியில் தளர்வுகளைப் பெற வேண்டும் என்றால் முதலில் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும் எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு வருவது மகிழ்ச்சியான விஷயம் எனவும் கூறினார் பாவிஷ் அகர்வால்.
இந்திய நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை
இதே தொடர்ந்து எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், விண்டு ஷீல்டு, கியர், பிரேக் மற்றும் பவர் சீட்களைத் தயாரிக்க இந்திய நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதோடு சில நாட்களுக்கு முன்பாக டெஸ்லா நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் மற்றும் ACMA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ்
முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய 3 நிறுவனங்களிடம் முக்கியமான எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிகல் உதிரி பாகங்களைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதைக் கவனித்து வந்த மத்திய அரசு டெஸ்லா-வை அழைத்துள்ளது.
40 சதவீத வரித் தளர்வு
டெஸ்லா கோரிக்கை விடுத்த 40 சதவீத வரி அளவிலான தளர்வுகளை அளிக்க முடியாது, ஆனால் கட்டாயம் சில முக்கியத் தளர்வுகள் அளிக்கப்படும். ஆனால் அதற்கு டெஸ்லா எந்த வகையில் முதலீடு செய்யப்போகிறது, இந்நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம் என்ன என்பதைத் தெரிந்த பின்பே தளர்வுகளை அறிவிக்க முடியும் என முக்கியமான அமைச்சகங்கள் கூறியுள்ளதாகப் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வரி எவ்வளவு..?
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட கார்களின் விலை 40,000 டாலருக்கு குறைவாக இருந்தால் 60 சதவீத வரியும், 40,000 டாலருக்கு அதிகமாக இருந்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகிறது.
2021 டிசம்பரில் விற்பனை
இந்தியாவில் 2021 டிசம்பர் மாதத்திற்குள் டெஸ்லா தனது விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது. இப்படியிருக்கும் பட்சத்தில் உடனடியாகத் தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியை துவங்கமுடியாது, அதனால் டெஸ்லா இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டெஸ்லா கார்களைச் சீனா அல்லது அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யும்.
சீனா, அமெரிக்கா இறக்குமதி
இப்படிச் சீனா அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா கார்கள் மீதான இறக்குமதி வரியை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா அரசிடம் கோரிக்கை வைத்தது. குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா வேண்டுகோள்
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் கார் பட்ஜெட் விலை கார் என்பதால் அதன் விலை கட்டாயம் 40,000 டாலருக்கு குறைவாகவே இருக்கும். தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பு முறையின் படி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா கார்கள் மீது 60 சதவீத வரி விதிக்கப்படும். இந்த வரியை தான் மத்திய அரசு குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது டெஸ்லா.
எலக்ட்ரிக் அல்லது பெட்ரோல்/டீசல் கார்கள்
டெஸ்லா கோரிக்கை வைத்த பின்பு அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் வரியை குறைக்கக் கோரிக்கை வைத்தது. இந்தியாவில் தற்போது இருக்கும் வரி விதிப்பு முறையின் படி எலக்ட்ரிக் அல்லது பெட்ரோல்/டீசல் கார்கள் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்படும் கார்கள் அனைத்திற்கும் அதன் விலையை அடிப்படையாக வைத்து வரி விதிக்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரி
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான GST வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான சார்ஜர் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
ஊக்க தொகை
இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், ஹைப்ரிட் வாகனங்களுக்கும் மத்திய அரசு ஊக்க தொகை வழங்குகிறது. இதன் மூலம் கார்களின் விலை பெரிய அளவில் குறைகிறது. இந்தச் சூழ்நிலையில் டெஸ்லாவின் கோரிக்கை நியாயம் எனக் கருதி, இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பணிகளைச் செய்யும் காரணத்தால் டெஸ்லாவுக்கு வரிச் சலுகை அளிக்க முன்வந்துள்ளது மத்திய அரசு.