தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொழிலணங்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக ஆட்சி காலத்தில் பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெண்களை சுய தொழில் முனைவோராக கொண்டு வர வேண்டும் என்பது முதலமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்று.
மிக்க மகிழ்ச்சி
இது குறித்து கடந்த மார்ச் மாதமே சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான மூன்றே மாதங்களில் நடைமுறைக்கும் வந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷனின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சிவராஜா ராமாநாதன், பெண்களுக்கான இந்த திட்டங்களை தொடங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த திட்டங்களுக்கு தொழிலணங்கு என்ற பெயரிடப்பட்டுள்ளது.
நோக்கம் என்ன?
இந்த திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்முறையை முற்றிலுமாக மாற்றி அதன் உறுப்பினர்களை, ஆக்கபூர்வமான தொழில் முனவோர்களாக உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம். இதன் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து, SMART SHG குழுக்களில் இருந்து உருவாகும் தொழில் முயற்சிகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்யவிருக்கின்றன.
பல்வேறு முயற்சிகள்
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும் பல்வேறு முயற்சிகளை தமிழ் நாடு ஸ்டார்ட் அப் அன்ட் இன்னோவேஷன் மிஷன் மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் விதமாக தொழில் முனைவோருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றது.
கவனம் பெற்ற திட்டம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, ஸ்டார்ட் அப்களின் தயாரிப்புகளை, அரசே கொள்முதல் செய்து ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து 50 லட்சம் வரை அவர்களின் தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது.
அரசுக்கு கோரிக்கை
இத்திட்டம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிவித்த பிறகு, முதல்வரிடம் இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்தேன்.
நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு
அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கொள்முதல் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெண்டர் விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறை சார்பில் கொள்முதல் மேற்கொள்ள 25 நிறுவனங்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
இது புதிதாக தொழில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் , தமிழ் இளைஞர்களுக்கும் பயன் அளிக்கும். இதனால் வேலைவாய்ப்புகளும் பெரும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என தெரிவித்துள்ளார்.