கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல துறைகள் துவண்டு போன நிலையில், ஐடி துறை மட்டும் வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது எனலாம். இதனால் ஐடி துறையில் வருவாய் விகிதமானது தொடர்ந்து உச்சம் தொட்டது.
இதற்கிடையில் ஐடி ஊழியர்கள் தொடர்ந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கும் இது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் மற்ற துறைகளில் கடந்த ஆண்டில் பலமான பணி நீக்கம், சம்பள குறைப்பு, சம்பளமில்லா விடுமுறை என ஊழியர்கள் மன உளைச்சலில் இருந்தனர். ஆனால் தற்போது அப்படியில்லை. பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன.
மூன்றாம் கட்ட பரவலா?
இதற்கிடையில் தற்போது மூன்றாவது அலையின் தாக்கம் வருமோ? என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பல புதிய ஒப்பந்தங்களில் கையெப்பம் இட்டு வருகின்றன. இதன் காரணமாக சந்தையில் ஐடி ஊழியர்களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஆஃபர் மேல் ஆஃபர்
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பணியமர்த்தலை செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நல்ல திறனுள்ள, டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களை தொடர்ந்து பணியமர்த்தி வருகின்றன. மேலும் தற்போது இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள, சம்பள உயர்வு, பதவி உயர்வு என கொடுத்து ஊக்குவித்து வருகின்றன.
முக்கியத்துவம்
மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது டிஜிட்டல் தேவைகள் இன்னும் கூடும். இதனால் ஐடி சந்தையில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற நிலையிலேயே, நிறுவனங்கள் தொடர்ந்து பணியமர்த்த தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐடி துறையில் தற்போது அட்ரிசன் விகிதமும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த பணியமர்த்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
தேவை வரலாறு காணாத அளவு அதிகரிப்பு
இந்திய சந்தையில் தொற்று நோயின் தாக்கத்தினை ஆராய்ச்சி செய்த இன்டீப் அறிக்கையின் படி, ஐடி வல்லுனர்களுக்கான தேவை 400% வரை அதிகரித்துள்ளது. இது மற்ற துறைகளை காட்டிலும் மிக அதிகம். ஐடி துறை வரலாறு காணாத அளவு பணியமர்த்தலை செய்தது. குறிப்பாக நல்ல டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்களுக்கு தேவை அதிகமாக உள்ளது.
இவர்களுக்கு தேவை அதிகம்
குறிப்பாக அப்ளிகேஷன் டெவலப்பர், லீட் கன்சண்டன்ட், சேல்ஸ்போர்ஸ் டெவலப்பர், திறன் மிகுந்த பொறியாளர்கள் போன்ற திறன் கொண்ட பணியாளர்களுக்கு தேவை 150 - 300% வரை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் மிக முக்கியமான தேவையாக இருந்தது. இது வரும் ஆண்டுகளிலும் நீடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
சம்பள உயர்வும் அதிகம்
பணியமர்த்தல் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகம் என்றாலும், சம்பள உயர்வு விகிதமும் அதிகம் என்பது நினைவில் கொள்ளதக்கது. குறிப்பாக 70 - 120% வரையில் சம்பள அதிகரிப்பு இருந்துள்ளது. இந்த விகிதமானது எதிர்பார்ப்புகளையும் விட அதிகம் எனலாம். இது உண்மையில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகம் எனலாம்.
டிசிஎஸ் என்ன கூறியது?
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், சமீபத்தில் அதிகளவில் பெண்களை பணியமர்த்த போவதாக அறிவித்தது. இது திறன் வாய்ந்த பெண் ஊழியர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமையும். மேலும் நீங்கள் திறமையுள்ளராகவும், ஆர்வமுள்ளவர்களாக இருந்தால், டிசிஎஸ் உங்களை அழைக்கிறது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் பணியமர்த்தல்
ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் சில முன்னணி டெக் ஜாம்பவான்கள் தீவிரமாக பணியமர்த்தல் செய்து வருகின்றன. இதற்கிடையில் சம்பள விகிதமும் நடப்பு நிதியாண்டில் 1.6 - 1.7 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஊழியர்களுக்கு பொன்னான நேரம்
ஆக மொத்தத்தில் இது ஐடி ஊழியர்களுக்கு இது பொன்னான நேரம் எனலாம். நல்ல சம்பளத்தில் நல்ல நிறுவனத்தில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு சரியான தருணம் எனலாம். மேலும் பெங்களூர், ஹைத்ராபாத், சென்னை உள்ளிட்ட ஐடி நகரங்களில், ரியல் எஸ்டேட் துறையையும் இந்த விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
ஐடி துறையில் பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்தால், சம்பள விகிதமும் அதிகரித்து வருகின்றது. இது இன்னும் குடியிருப்புக்காக ஊழியர்களை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய தூண்டலாம். இது இன்னும் வலுவான வளர்ச்சியினை தூண்டலாம் என நிபுணர்கள் கூறிவருகின்றனர்.