முன்பாக சொத்து பதிவுக்கு சந்தையின் உயர் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பத்திரபதிவு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த கூடுதல் சுமையை குறைக்கும் பொருட்டு, தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடியாக ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இனி ஒரு சொத்தினை பதிவு செய்யும்போது, அந்த பகுதியின் அரசு வழிகாட்டி மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கட்டணமாக வசூலிக்கப்படும். சந்தையின் உயர் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என உத்தரவிட்டுள்ளார்.
பல குளறுபடிகள்
பழைய முறையில் பல குளறுபடிகள் நிலவி வந்த நிலையில், பதிவுக்கு வரும் ஆவணங்கள் பதிவு செய்ய தாமதமாகி வந்தன. அதோடு மாவட்ட பதிவாளர்களை அணுகுவதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தெளிவான வழிகாட்டுதல் என்பது இல்லாத நிலையில், இந்த பத்திர பதிவு கட்டணம் வசூலிப்பதிலும் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தன. ஆக இந்த குளறுபடிகளை நீக்கவே இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.
இனி கட்டணம் குறையலாம்
இதனால் இனி பத்திர பதிவு கட்டணங்கள் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசின் இந்த நடவடிக்கையானது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
அதோடு ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என பதிவுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சராசரி பதிவு
தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விவசாய நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது.
சில முறைகேடுகள்
இப்படி செய்யப்படும் பத்திரப்பதிவின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்து வருகின்றன. பல்வேறு காரணங்களை கூறி பதிவு செய்யப்படும் ஆவணங்களை திருப்பி தராமல் சார்பதிவாளர்கள் இழுத்தடிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கட்டணத்தில் குளறுபடி
குறிப்பாக, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்வதில் குளறுபடி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரம் பதிவு செய்வதாக பல அலுவலகங்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
15 நாட்கள் தான் டைம்
மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள ஆவணங்களை அடுத்த 15 நாட்களில் முடிக்க அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் முழு வடிவில் இருந்தால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அந்த ஆவணங்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.