தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில்போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
குறிப்பாக இந்த நகைக்கடன் மூலம் பெரும்பாலும் விவசாயிகளே பயனடைந்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.
இதில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாகவும், இதனால் இப்பிரச்சனைகள் களையப்பட்டு பின்னரே அறிவிக்கப்படும் என தமிழக அரசு கூறி வந்தது.
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி
இந்த நிலையில் தீபாவளிக்கு விவசாய பெருமக்களுக்கும், சாமனிய மக்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இத்தகைய அறிவிப்பானது வந்துள்ளது. அதில் தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அல்லது 40 கிராம் நகைக்கடன் ஆனது தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
யாரெல்லாம் பயன்
தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் நகைக்கடன் பெற்ற 16 லட்சம் பேர் பயனடைவர். இந்த அரசாணையில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாமனிய மக்கள் பெரும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தள்ளுபடி தொகையை அரசு ஏற்றுக் கொள்ளும்
இந்த நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான கூடுதல் நெறிமுறைகளைக் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் வகுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுப்படிக்கான அசல் மற்றும் வட்டியை அரசு ஏற்றுக் கொண்டு, தள்ளுபடி தொகையைக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ஹேப்பி நியூஸ்
மார்ச் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் தகுதி நாளாக கொண்டு இந்த தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது, விவசாய பெருமக்கள் மத்தியில் ஒரு ஹேப்பி நியூஸ் ஆக பார்க்கப்படுகிறது.
அரசுக்கு செலவு
இந்த நகைக்கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு 6,000 கோடி ரூபாய் வரையில் செலவாகும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தள்ளுபடியின் அசல் தொகை மற்றும் ஏப்ரல் 2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள் வரையிலான வட்டியை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மொத்தம் நிலுவை
தமிழக அரசின் அறிவிப்பினை அடுத்து குடும்ப அட்டையின்படி, ஒரு குடும்பத்தினர் மார்ச் 31, 2021ம் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில், ஒரு சில கடன்தாரர்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தங்களது கடன்களை செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த தொகை ரூ.17,114.64 கோடி. அதன்பிறகு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை கடன்தாரர்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தங்களது கடன்களை செலுத்தியது மற்றும் தகுதி பெறாத தேர்வர்களை நீக்கிய பின்னர் அசல், வட்டி, அபராத வட்டி, மற்றும் இதர செலவுகள் உள்ளீட்டு தொகையாக ரூ.6,000 கோடி (தோராயமாக) உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.