உலகளவில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், ரெசிஷன் அச்சமும், டெக் நிறுவனங்களின் வருவாய் சரிவும் மேம்படவில்லை.
இதனால் தொடர்ந்து பணிநீக்கம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இந்தியாவில் இதன் எதிரொலி அதிகமாக இருக்கிறது. பல டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இந்தியாவில் பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில் அமேசான், கூகுள் ஆகியவை மிகப்பெரிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான்
உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான் ஏற்கனவே 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இந்தியா உட்படப் பல நாடுகளில் இருக்கும் தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், சமீபத்தில் முக்கியமான அறிவிப்பு வெளியானது.
2023ல் தொடரும்
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிர்வாகத்தின் பணிநீக்க பணிகள் அடுத்தச் சில மாதங்களுக்குத் தொடரும் என்றும் இதனால் பணிநீக்கம் மற்றும் ஊழியர்கள் திறன் மதிப்பீடுகள் அனைத்தும் முடிந்த பின்பு எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பணிநீக்கம்
இதோடு பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விடவும் அதிகரிக்கும் என அறிவித்த அவர், அமேசான் நிறுவனத்தின் அனைத்து சந்தைகளிலும், அனைத்து பிரிவுகளிலும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
20000 ஊழியர்கள்
இதனால் அமேசான் நிறுவனத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10000 ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 20000 வரையிலும், 2023 ஆம் ஆண்டின் முழுமையாக அல்லது குறைந்தபட்சம் முதல் 6 மாதத்தில் பணிநீக்க அறிவிப்புகளும், நடவடிக்கைகளும் நடக்கும் எனக் கூறப்படுகிறது.
கூகுள்
இதேவேளையில் மறுபுறம் உலகின் மற்றொரு டெக் சேவை நிறுவனமாக விளங்கும் கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஏற்கனவே எச்சரித்தது போலு வருவாய் மற்றும் வருமானம் அதிகரிக்கவில்லை எனில் ரத்த வெள்ளம் தான் எனக் கூறியது போல் மொத்த ஊழியர்களில் சுமார் 6 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தது.
10000 ஊழியர்கள் பணிநீக்கம்
இதன் மூலம் 10000 ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. கூகுள் இதற்கான அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் கூகுள் 2023 துவக்கத்தின் முதல் அறிவிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டு எப்படி மோசமான பாதிப்பை எதிர்கொண்ட நிறுவனங்களும், ஊழியர்களும் 2023 ஆம் ஆண்டிலும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.
ஐரோப்பா
இதே காலகட்டத்தில் தான் ஐரோப்பா மொத்தமாக ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் வர்த்தகம், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படும், இதன் மூலம் கூடுதலான பணிநீக்க அறிவிப்புகள் வெளியானாலும் வியப்படையத் தேவையில்லை.
2022 பணிநீக்கம்
இந்த நிலையில் 2022ல் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த டாப் 10 நிறுவனங்கள்
மெட்டா - 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
அமேசான் - 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
டிவிட்டர் - 3700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
போர்டு - 3580 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
பெட்டர்.காம் - 3250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
மைக்ரோசாப்ட் - 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
பைஜூஸ் - 2500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
Blinkit - 1600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
யூனிலீவர் - 1500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது
டோர்டேஷ் - 1250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது