இன்றைய தேதியில், யாரையாவது தண்டிக்க வேண்டும் என்றால், அவர்களை ஒரு சில மணி நேரங்களுக்கு இணையம் இல்லாத சூழலில் விட்டாலே போதும்.
வாட்ஸப், ஃபேஸ்புக், மெயில், யூ டியூப் என எதையும் பார்க்க முடியாமல் தவிப்பிலேயே திருந்தி விடுவார்கள். அந்த அளவுக்கு இணைய பயன்பாடு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
ஒரு காலத்தில் (ரொம்ப எல்லாம் இல்லிங்க ஒரு 3 வருஷத்துக்கு முன்னாடி) 1 ஜிபி டேட்டாவையே ஊறுகாய் போல, பார்த்து பார்த்து பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். ஆனால் இன்று நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா என பிரியாணி கணக்காக வளைத்து அடித்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு மேல் டேட்டா பயன்பாடு குறித்து விளக்கத் தேவை இல்லை என நினைக்கிறேன்.
இப்படி இணைய பயன்பாடு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்க, மறு பக்கம் இணைய திருட்டுகள், பிரைவசி சிக்கல்கள், தரவுகளுக்கான பாதுகாப்பின்மையும் மறு பக்கம அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த சிக்கல்களை எதிர் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் மின் சாதன பொருட்கள் மற்றும் சேவைகளை பாதுகாப்பான தாக வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் இணைய சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை.
ஆக, தங்கள் மின்சாதன பொருட்களில் இருக்கும் சிக்கல்களை கண்டு பிடித்து சரி செய்ய கடந்த பல காலங்களாக ஒரு போட்டியை நடத்தி வருகிறார்கள்.
அது தான் குறை கண்டு பிடிக்கும் போட்டி. இதை ஆங்கிலத்தில் Bug Bounty Program என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட போட்டிகளை ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் என பல முன்னணி டெக் நிறுவனங்கள் வைத்திருப்பது தான்.
இப்போது கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் ரக ஸ்மார்ட்ஃபோன்களில், ஏதாவது பக் இருந்தது என்றால் அதைக் கண்டு பிடித்துச் சொல்லி 1 மில்லியன் டாலர் (7 கோடி ரூபாய்) பரிசு பெறலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அதோடு கூகுள் பிக்ஸலில், ஏதாவது வைரஸ் அட்டாக் நடத்த முடியும் என நிரூபித்தால், கூடுதலாக 0.5 மில்லியன் டாலர் (3.5 கோடி ரூபாய்) பரிசாக கொடுக்க இருக்கிறார்களாம்.