உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் பணிநீக்கம் மூலம் ஊழியர்களைப் பந்தாடி வரும் வேளையில் கூகுள் ஒரு படிக்கு மேலே சென்று, ஊழியர்களின் மிகப்பெரிய கனவில் மண்ணைப் போட்டு உள்ளது.
தமிழரான சுந்தர் பிச்சை தலைமையில் இயங்கும் கூகுள் கடந்த வாரம் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தாலும் கிட்டதட்ட 6 மாத சம்பளத்தைக் கொடுத்து ஊழியர்களை வெளியேற்றியது. ஆனால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஒரே நேரத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், பணியில் இருக்கும் ஊழியர்களின் அமெரிக்க வாழ்க்கை கனவை முறியடித்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்றும் 90 சதவீத இந்தியர்களுக்கு அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாகப் பிக் டெக் 4 என அழைக்கப்படும் அமெரிக்காவின் 4 பெரிய டெக் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் வாயிலாகவே எளிதாக அமெரிக்கக் குடியுரிமை பெறும் வாய்ப்பு உள்ளது.
கூகுள் அறிவிப்பு
இந்த முக்கியமான சேவையைத் தற்போது கூகுள் நிறுத்தியுள்ளதாக அறிவித்து அதன் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கூகுள் தனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கியமான மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
PERM திட்டம்
இதில் கூகுள் நிர்வாகம் Program Electronic Review Management (PERM) திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இது தான் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கான முதல் படி.
புதிய விண்ணப்பங்கள்
கூகுள் அறிவிப்பின் படி PERM திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்களை ஏற்பதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துவிட்டு,இந்தச் செய்தி உங்களில் சிலரையும் உங்கள் குடும்பத்தினரையும் எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியும், அதனால் தான் இப்புதிய கடினமான முடிவைப் பற்றி விரைவாகவே உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
BLIND தளத்தில் குமுறல்
இதேபோல் இது மற்ற விசா விண்ணப்பங்கள் அல்லது திட்டங்களைப் பாதிக்காது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிர்வாகம். இந்தத் தகவலை அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கும் BLIND என்னும் தளத்தில் கூகுள் ஊழியர்களைத் தெரிவித்துள்ளனர்.
கிரீன் கார்டு
இதனால் கூகுள் ஊழியர்கள் கிரீன் கார்டு வாங்க வேண்டும் என விரும்பினால் அடுத்தச் சில மாதங்களுக்கு நடக்காது. இந்த PERM திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் குறிப்பிட்ட பணியைச் செய்யத் தகுதியான அமெரிக்கத் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதை நிறுவனம் நிரூபிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு சந்தை
அதாவது அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் இதற்காகத் தகுதியான ஆள் யாரும் இல்லை இதனால் இவர்களுக்குக் கிரீன் கார்டு கொடுத்து அமெரிக்கக் குடிமகனாக அறிவிக்கப் பரிந்துரை செய்யும் ஒரு நடவடிக்கை தான்.
பணிநீக்கம்
தற்போது அமெரிக்காவில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிகளவிலான ஊழியர்கள் வேலையில்லாமல் இருக்கும் வேலையில் PERM திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்தால் அமெரிக்காவின் Department of Labor (DOL) கட்டாயம் ஏற்காது. இதனால் கூகுள் உடன் பல முன்னணி டெக் நிறுவனங்களும் இதேபோன்ற முடிவை எடுத்துள்ளது.
பிற விசா
கூகுள் நிறுவனத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் கூகுள் ஊழியர்களுக்கு PERM திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெற்றுக்கொண்டு கிரீன் கார்டு அளித்து வந்தது. இந்த நிலையில் புதிய விண்ணப்பத்தைப் பெறாது என அறிவித்த கூகுள், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்குப் போதுமான உதவிகளைக் கட்டாயம் செய்யும் என உத்தரவாதம் அளித்துள்ளது.