உக்ரைன் மீது ரஷ்யாவின் போருக்கு பின்பு உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் பல வகையில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்திற்குப் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.
ரஷ்யா அரசின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியின் படி, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் ரஷ்யத் துணை நிறுவனம் (Google Russia) திவாலாகியுள்ளதாக அறிவித்து இன்சால்வென்சி-க்கு விண்ணப்பித்துள்ளது.
கூகுள் நிறுவனம்
ரஷ்யாவில் இயங்கி வரும் கூகுள் நிறுவனம் மார்ச் 22, 2022 முதல், திவாலாகும் நிலையும், பணக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை, ஊழியர்களுக்கான பிரிவினைக் கொடுப்பனவு, வேலை ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரியும் அல்லது முன்னர்ப் பணிபுரிந்த ஊழியர்களின் ஊதியம், பேமெண்ட்களைச் செலுத்த முடியாத நிலையை எதிர் கொண்டு வருகிறது.
ரஷ்யா
இந்நிலையில் ரஷ்யாவில் இயங்கும் கூகுள் நிறுவனம் தானாக முன் வந்து திவாலாக அறிவித்து ரஷ்ய அரசிடம் உரிய அறிக்கை, விளக்கம் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது. இதனால் கூகுள் ரஷ்யாவில் அதிகாரப்பூர்வமாகத் திவாலாகியுள்ளது.
விளக்கம்
இதுகுறித்துக் கூகுள் நிறுவனமும் பதில் அளிக்கவில்லை, அதேபோல் கூகுள் ரஷ்யாவின் பொது இயக்குனர் என அறியப்படும் டேவிட் ஸ்னெடன்-ம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசு - கூகுள் நிறுவனம்
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியதில் இருந்தே ரஷ்ய அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் பல்வேறு நெருக்கடிகள் இருந்து, முதலில் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக ரஷ்ய அரசு அமைப்புகளுக்கான விளம்பர சேவையை நிறுத்தியது கூகுள் ரஷ்யா.
ரஷ்யாவுக்கு எதிரான செய்திகள்
இதைத் தொடர்ந்து உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான செய்திகளைப் பரப்புவதாக ரஷ்யா அரசு குற்றம்சாட்டி நீக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கூகிள் அரசின் உத்தரவை ஏற்காத காரணத்தால் அனைத்து கூகுள் சேவைகளையும் ரஷ்ய அரசு தடை செய்தது.
பணப் பரிமாற்றங்கள்
இதற்கிடையில் ரஷ்யா உடன் பணப் பரிமாற்றங்களைச் செய்ய வல்லரசு நாடுகள் தடைவிதித்த நிலையில் ரஷ்யாவில் இயங்கும் கூகுள் நிறுவனம் போதுமான நிதியை அமெரிக்கத் தலைமையகத்திடம் இருந்து பெற முடியாத காரணத்தால் தற்போது திவாலாகியுள்ளது.