திறமைக்கு என்றுமே முடிவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் தான் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை, தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் கூடுதல்; பொறுப்பேற்றுள்ளார்.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள நிறுவனம் தான் ஆல்பாபெட் இன்க். கூகுள் நிறுவனத்தை மறு சீரமைக்கும் முயற்சியில் ஆல்பாபெட் நிறுவனம், கடந்த அக்டோபர் 2, 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின் அது கூகுள் மற்றும் பல கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனமாக மாற்றப்பட்டது. இதன் தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜ்ஜூம், இதன் தலைவராக செர்ஜி பெரினும் நிர்ணயிக்கப்பட்டனர்.
இந்த ஆல்பாபெட் நிறுவனம் இணைய சேவைகள் தவிர வேறு வணிகங்களின் செயல்படும் குழு நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்கும். அதே நேரம் முக்கிய கூகுள் இணைய சேவை வணிகத்தை தூய்மையான மற்றும் பொறுப்புறக்கூடியதாக மாற்றுவதற்கான நிறுவனமாக ஆல்பாபெட் நிறுவனம் நிறுவப்பட்டது.
என்னென்ன சேவைகள்
உலக அளவில் தனது சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனம், டெக்னாலஜி, இணைய சேவை, சாப்ட்வேர், லைஃப் சயின்ஸ், ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட், பையோடெக்னாலஜி, வீடியோ கேம்ஸ் என பல சேவைகளை செய்து வருகிறது. இதன் மூலம் அனுதினமும் பல ஆயிரம் கோடி வருவாயும் ஈட்டி வருகிறது.
வருவாய் எவ்வளவு?
இந்த நிறுவனத்தின் வருவாய் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? கடந்த 2018ம் ஆண்டில் இந்த ஆல்பாபெட் நிறுவனத்தின் வருவாய் 30.74 பில்லியன் டாலர் ஆகும். (இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) இதே காலத்தில் இதன் வருவாய் 136.82 பில்லியன் டாலர்களாகும். இதன் மொத்த சொத்து மதிப்பு 232.8 பில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனத்தில் கடந்த 2018 அறிக்கையின் படி 1,03,549 ஊழியர்கள் பணி புரிந்து வந்துள்ளனர்.
துணை நிறுவனங்கள்
காலிகோ, கேப்பிட்டல் ஜி, க்ரானிக்கிள், டீப்மைன்ட், கூகுள், கூகுள் ஃபைபர், ஜிவி, ஜிக்ஷா, லூன், மஹானி, சைடுவாக் லேப்ஸ், வெர்ரிலி, வேமோ, விங் உள்ளிட்ட துணை நிறுவனங்கள் இந்த ஆல்பாபெட் நிறுவனத்தில் உள்ளன. இந்த நிலையில் தற்போது கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, கூடுதலாக ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகல்
அவ்வாறு தாய் நிறுவனமாக்கப்பட்ட ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாகியாக லாரி பேஜும், தலைவராக செர்ஜி பெரினும் பொறுப்பு வகித்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இருவரும் ஆல்ஃபபெட் நிறுவனத்தில் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். எனினும் தாங்கள் பங்குதாரராகவும் மற்றும் இணை நிறுவனர்களாகவும் தொடர்ந்து செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிக்க மகிழ்ச்சி
நாங்கள் அனைவரும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களின் நிறுவனர்கள் உதவி செய்துள்ளனர். இது ஒரு வலுவான அடித்தளம். அதில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். அடுத்து நாம் எங்கே செல்வோம் என தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். உங்கள் அனைவருடனும் எனது பயணத்தை தொடர்வதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை தான் சரியான தேர்வு
இது தொடர்பாக லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிறுவனத்தினை இன்னும் திறம்படச் செயல்பட வைக்க வழிகள் இருக்கும்போது நாங்களே அதை கையில் வைத்திருக்க விரும்பவில்லை. அதை நாங்கள் என்றுமே நினைத்தது கிடையாது. சுந்தர் பிச்சை நமது பயனாளர்கள், ஊழியர்கள், என அனைத்து தரப்பினரிடமும் தொழில் நுட்பம் தொடர்பான ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார். கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரை விட எவராலும் சிறப்பாக வழி நடத்திட முடியாது எனத் தெரிவித்துள்ளார்கள்.
நன்றி தெரிவித்துள்ள சுந்தர்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, தொழில் நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களை சமாளிப்பதில் ஆல்பாபெட்டின் நீண்டகால கவனம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், லாரி மற்றும் செர்ஜிக்கு எனது நன்றிகள் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications