டெல்லி: வோடபோன், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான சுமார் 45,000 கோடி ரூபாயை செலுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடுமையான போட்டியின் காரணமாக படும் வீழ்ச்சியில் இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, பேரிடியாக உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து இருப்பது, அந்த நிறுவனங்களிடையே பெரும் வரவேற்பை கண்டுள்ளது.
கடும் போட்டி
ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர், போடியை சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் தங்களது லாபத்தினை மறந்து, சகட்டு மேனிக்கு டேட்டாக்களையும், வாய்ஸ் கால்களுக்கான சலுகைகளையும் அள்ளி வீசின. ஏனெனில் ஜியோ ஆரம்பத்தில் முற்றிலும் இலவச வாய்ஸ் கால் சேவையை அளித்து வந்தது. இதை தவிர்க்க ஏதாவது ஒரு வழி கிடைத்து விடாதா?, இந்த ஜியோவை கேள்விக் கேட்க என்று நினைத்த நிறுவனங்களுக்கு ஐயூசி பிரச்சனை வரப்பிரசாதமாக கிடைத்தது.
ஐயூசி கட்டணம்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அல்லவா கிடைத்ததை போல, ஜியோ இதில் ஏதோ பிரச்சனை செய்துள்ளது என்று மற்ற நிறுவனங்கள் அனுமானித்தன. இதன் பின்னர் தான் ஐயூசி கட்டணமும் விதிக்கப்பட்டது. இதற்கு அடுத்து வேறு வழியே இல்லாமல் ஜியோவும் கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தது. முற்றிலும் இலவச சேவையை கொடுத்து வந்த ஜியோ, தற்போது ஜியோ தவிர மற்ற நெட்வொர்க்குகளுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை
இந்த பிரச்சனை முடிந்த கொஞ்ச நாளிலேயே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பின் படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை உரிமக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வகையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 21,682.13 கோடி ரூபாயும், இதே வோடஃபோன் ஐடியா நிறுவனம் 19,823.71 கோடி ரூபாயும், இதே ரிலையன்ஸ் ஜியோ 16,456.47 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளதாகவும், மற்ற நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையும் சேர்த்து மொத்தம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் 92,641.61 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
பாதுகப்பு நடவடிக்கை
மேலும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு டஜன் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது மூன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இருக்கும் நிறுவனங்களையாவது பாதுக்காக்க வேண்டும் என்று அரசு உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் வந்த பின்னர் இது திவிர விலை யுத்தத்தை வழங்கியது என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே பல நிறுவனங்கள் இத்துறையில் இருந்து விலக இது வழி வகுத்தது என்றும் கூறப்படுகிறது.
தொடர் நஷ்டம்
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வோடபோன் ஐடியா வரலாறு காணாத அளவு நஷ்டத்தினை கண்டது. இதே பாரதி ஏர்டெல் நிறுவனமும் நஷ்டத்தினையே பதிவு செய்தது. எனினும் இந்த நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி ஜியோ அதிக வாடிக்கையாளர்களை பெற்று லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் ஏர்டெல், வோடபோன் நிறுவங்கள் கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சீறிப் பாய்ந்த பங்குகள்
இந்த நிலையில் அரசின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அடுத்த டிசம்பர் 1 முதல் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்தன. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாகவே சீறிப் பாய்ந்தன. எனினும் இன்று பார்தி ஏர்டெல் பங்கின் விலை 11 ரூபாய் குறைந்து 423 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே வோடபோன் ஐடியா பங்கின் விலை ஏற்கனவே அதள பாதாளத்தில் இருந்தாலும், தற்போது 5 சதவிகிதம் குறைந்து 6.68 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.