சமீபத்தில் தான் உச்ச நீதி மன்றம் சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த லைசென்ஸ் கட்டணம் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அது என்ன லைசென்ஸ் கட்டணப் பிரச்சனை..?
பிரச்சனை
மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். அப்படி கணக்கிடும் போது, நிறுவனங்கள் ஒரு மாதிரியும், அரசு டெலிகாம் துறை வேறு ஒரு மாதிரியும் கணக்கு செய்துவிட்டார்கள். அது தான் இந்த பிரச்னையில் அடி நாதமே..!
வருவாய் கணக்கு
டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரி செய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.
அரசு தரப்பு கணக்கு
மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.
நிறுவனங்கள் வாதம்
ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.
உச்ச நீதிமன்ற கணக்கு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஒரு பழைய டெலிகாம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
எனவே ஏர்டெல், வொடாபோன் ஐடியா, உட்பட பல நிறுவனங்கள் கோடிக் கணக்கில் அரசுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கிறது. உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து சுமாராக 92,650 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக வர இருக்கிறது.
இதுக்குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேற்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்கள் கேட்ட போது, ஏற்கனவே போராடிக் கொண்டு இருக்கும், இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய கட்டணங்களை வசூலிக்கும் அவசரத்தில் அரசு இல்லை எனச் சொல்லி இருக்கிறார். அதோடு துறை சார் செயலர்கள், இந்த விவகாரத்தில் ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள், இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.