அமெரிக்கா சீனா பிரச்சனையால் பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது இந்தியா பக்கம் படையெடுத்து வருகிறது. இதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவை ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்யும் ஒரு உலகளாவிய தளமாக மாற்றவும் மத்திய அரசு இத்துறை நிறுவனங்களுக்குக் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க ஆலோசனை செய்து வருகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் ஆப்பிள், சாம்சங், ஹூவாய், வீவோ, ஓப்போ ஆகிய நிறுவனங்களுக்குத் தற்போது வரிச் சலுகை திட்டத்தில் கொடுக்கப்படும் 4 சதவீத தளர்வை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இலக்கு
இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சந்தையின் மதிப்பு 3 பில்லியன் டாலராக உள்ளது, இதை 2025ஆம் ஆண்டுக்குள்ள அதாவது அடுத்த 6 வருடத்திற்குள் 110 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் உயர்த்த தடுமாறும் நிலையில் 6 வருடத்தில் 3 மடங்க வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வரிச் சலுகை
இந்த 3 மடங்கு வளர்ச்சி அடைய மத்திய அரசு தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் duty credit slip எனப்படும் வரிச் சலுகையை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்த ஆலோசனை செய்து வருகிறது.
ஆனால் ஸ்மார்ட்போன் தாயரிப்பு நிறுவனங்களோ 8 சதவீதம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த duty credit slip சலுகையை நிறுவனங்கள் சுங்க வரி செலுத்தும் போதும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கட்டுப்பாடு
இதேபோல் புதிய தளர்வுகளைப் பெற நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது. இதில் குறிப்பாக எந்த ஒரு நிறுவனம் தனது விநியோக முறையையும் இந்தியா முழுவதும் உருவாக்கி நாட்டை ஏற்றுமதி HUB-ஆக மாற்றும் நிறுவனங்களுக்குத் தான் இந்தச் சலுகையை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதர காரணிகள்
இது மட்டும் அல்லாமல் மத்திய அரசு அளிக்க உள்ள கூடுதல் சலுகைகளைப் பெற வேண்டும் என்றால் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல், முதலீடு, தயாரிக்கப்படும் போனின் விலை, உற்பத்திக்காகச் செலவிடப்படும் தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கூடுதல் சலுகையை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.