டெல்லி: ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகின்றது.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உலக நாடுகளின் பொருளாதாரம், எரிசக்தி சுற்றுசூழல், பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் ஜி20 தலைவர்கள் பலரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிப்டோகரன்சிகள் சரிவு
சமீப காலமாகவே கிரிப்டோகரன்சிகள் என்பது மிகப்பெரிய அளவில் சரியத் தொடங்கியுள்ள நிலையில், இதனால் பலரும் பெரும் இழப்பினை கண்டு வருகின்றனர். எனினும் கிரிப்டோகரன்சிகள் குறித்து சரியானதொரு நடைமுறைகள், விதிகள் என்பது கிடையாது. சொல்லப்போனால் இதனை யார் தொடங்குகிறார்கள். யார் யார் வர்த்தகம் செய்கிறார்கள். இது நிரந்தரமாக இருக்குமா? இல்லையா? என்பது கூட தெரியாமல் பலரும் வணிகம் செய்து வருகின்றனர்.
கிரிப்டோ குறித்து ஆலோசனை
இப்படியொரு சூழ்நிலையில் இந்திய அரசு இது குறித்தான முக்கிய முடிவு எடுக்க ஜி20 நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதன் மூலம் முக்கிய முடிவு குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிப்டோகரன்சிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விருப்பம்
ரிசர்வ் வங்கியினை பொறுத்தவரையில் இதனை ஒழுங்குபடுத்துவது ஒரு விருப்பம் என்றாலும், மற்றொன்று அதனை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்பதும் விருப்பமாகத் தான் உள்ளது. எனினும் இது குறித்த இறுதி முடிவு என்பது அரசு எடுக்கவில்லை என்றே கூறலாம். இதனை அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த நிலையில், நிச்சயம் ஜி20 கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
ஒழுங்குமுறை தேவை
கிரிப்டோகரன்சிகளுக்கு உலகளாவிய ஒழுங்குமுறை தேவை. ஐஎம்எஃப் போன்ற பல கூட்டணிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கிரிப்டோகரன்சிகள் குறித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பார்வையை கொண்டுள்ளன. இதன் காரணமாக இதனை அவ்வளவு எளிதில் தடை செய்ய முடியாது. கிரிப்டோகரன்சி உலக பொருளாதாரத்தின் டாலர் மயமாக்கலுக்கு உதவும் என்பதால், அதனை அமெரிக்கா போன்ற நாடுகள் தடை ஆதரவை ஆதரிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் கருத்து
ரிசர்வ் வங்கியோ இந்த கருவிக்கு ஆதாரமாக எந்த அடிப்படை சொத்தும் இல்லை என்ற அடிப்படையில் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டது. கிரிப்டோகரன்சிகளை அனுமதிப்பது டாலர்மயமாக்கலைத் தவிர, நாணயம் மற்றும் நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவது கடினமாக இருக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட கவலைகளையும் எழுப்பியுள்ளது.
ஜி-20 அமைப்பில் உள்ள நாடுகள்
ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இந்தோனேசியா, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.