டெல்லி: நாட்டில் எப்படிபட்ட நெருக்கடியான நிலை நிலவி வந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு,குறு தொழில் செய்வோருக்கு பல்வேறு வகையான திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
ஒரு புறம் கொரோனாவினால் தொழில்கள் முடங்கி போனாலும், அதிலிருந்து மீட்டெடுக்கவும், அரசின் இந்த ஊக்குவிப்பு திட்டங்கள் ஓரளவு பொருளாதாரத்தினை இதன் மூலம் மீட்டெடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள்.
ஏனெனில் மக்களின் கையில் பணமே இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கும்.
வணிகம் செய்யுங்கள்
ஆனால் அவர்களிடம், வங்கிகளில் கடன் வாங்குவதற்கான பிணையமாவது இருக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான திறமை உள்ளவர்கள் கூட, முடங்கி போகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் கைகொடுக்கும் விதமாக நாங்கள் இருக்கிறோம் நீங்கள் தைரியமாக வணிகம் செய்யுங்கள் என்று கூறியுள்ளது அரசு.
கடன் வாங்க பிணையம் வேண்டாம்
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெற அடமானமாக சொத்துக்கள் எதையும் காட்டத் தேவையில்லை. அந்த உத்தரவாதத்தை இனி அரசே வழங்கும். இதற்காக மூன்று லட்சம் கோடி அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு கடன் உதவி
அதோடு 45 லட்சம் சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு கடன் வழங்க 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு 4 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இந்த கடனை 12 மாதங்கள் கழித்து தான் திரும்ப செலுத்தும் காலமும் தொடங்கும். அதோடு நெருக்கடியில் உள்ள சிறுகுறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், சிறப்பு கடன் உதவிக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு குறு வணிகர்களுக்கு பயன் அளிக்கும்
அரசின் இந்த நடவடிக்கை சிறு குறு நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். இதன் மூலம் லாக்டவுனிற்கு பிறகு அவர்கள் மீண்டும் தங்கள் வணிக நடவடிக்கைகளை தொடர வழிவகுக்கும். இதனால் தொற்றூ நோயின் போது ஏற்படும் பணியிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். இதோடு சிறுகுறு நிறுவனங்களுக்கான வரையறைகளும் மாற்றப்பட்டுள்ளன.