டெல்லி : அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் ஊழியர்கள், இந்த நிறுவனம் தனியார்மயம் ஆகும் வரை பாதுக்காக்கப்படுவார்கள் என்றும், அதுவரை பணி இழப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இது குறித்து பதிலளித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அரசாங்கம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியுள்ள நியாயமான ஒப்பந்தத்தை பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஏர் இந்தியா நிறுவனம் சரியான நேரத்தில் சம்பளம் வழங்காததால், பல விமானிகள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற செய்தியையும் அவர் நிராகரித்தார்.
ஏர் இந்திய விமானிகளின் சம்பளம் நன்றாகத் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற விமான நிறுவனங்களில் வழங்கப்படுவது போன்று தான் நல்லமுறையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் பூரி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை ராஜினாமா சம்பந்தப்பட்ட எந்தவொரு வழக்கு பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிதி நெருக்கடியில் இருந்தபோது பல்வேறு ஊழியர்களின் 25 சதவிகித சம்பளம் நிறுதப்பட்டதாக பூரி கூறியுள்ளார். மேலும் தனியார்மயமாக்கல் அல்லது இந்த நிறுவனத்தில் முதலீடுகள் செய்யப்படுவதற்குள், நிலுவையில் உள்ள 25 சதவிகித தொகையும், அனைத்து ஊழியர்களுக்கும் திரும்ப செலுத்தப்படும் என்றும் பூரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தனியார்மயமாக்கல் முடியும் வரை, ஏர் இந்தியாவில் வேலை இழப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
தற்போதைய ஊழியர்கள் தொடர்பான பிரச்சனைகள், அவர்களின் உடல் நலப் பாதுகாப்பு, எத்தனை பேர் இருப்பார்கள், அடுத்து என்ன நடக்கும். அனைத்து ஊழியர்களுக்கும் சாதகமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நான் அந்த அளவுக்கு அதை எடுத்துச் செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படாவிட்டால், உங்கள் விமான நிறுவனத்தை மூட வேண்டி இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். எப்படியோங்க ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பணி இழப்பு என்பது இல்லாமல் இருந்தால் சரிதான். ஒரு புறம் இதுபோன்ற அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவது மோசமான விஷயமாக கருதப்பட்டாலும், இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை காப்பாற்றப்பட உள்ளது என்று நினைக்கும் போது, எதுவும் சொல்வதற்கில்லை.