உலகளவில் சமையில் எண்ணெய் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் இதன் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக உலகிலேயே அதிகப்படியான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்த வரிக் குறைப்பு மூலம் விரைவில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது,
உணவு பணவீக்கம்
இந்த வரி குறைப்புக்கு முக்கியக் காரணம் இந்தியாவில் அதிகரித்துள்ள உணவு பணவீக்கம் தான். மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்-க்கு வரி குறைத்துள்ளதைப் பார்க்கும்போது, இந்தியாவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்-ஐ விடச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு அதிக டிமாண்ட் உள்ளதை காட்டுகிறது.
பாமாயில் தேவை
இந்தியாவில் கச்சா எண்ணெய் போல் பாமாயில் தேவையும் இறக்குமதி வாயிலாகத் தான் ஈடு செய்யப்படுகிறது, அந்த வகையில் தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ள காரணத்தால் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து வரும் பாமாயில் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
பழைய வரி மற்றும் செஸ்
மத்திய அரசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வரிக் குறைப்பு மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் சுத்திகரிப்புப் பாமாயில் மீது இறக்குமதி வரி உடன் சேர்ந்து, விவசாய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் மற்றும் இதர வரிகளைச் சேர்த்து 13.75 சதவீதமாக உள்ளது, வரி குறைப்புக்கு முன் 19.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி சலுகை
மேலும் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்டு ப்ளீச் செய்யப்பட்ட டியோடரைஸ் பாமாயில் மீது இருந்த இலவச இறக்குமதி சலுகை டிசம்பர் 31,2022 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது, ஆனால் இந்த எண்ணெய்-ஐ எந்தக் கேரள துறைமுகத்திலும் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பியூச்சர் டிரேடிங் தடை
இந்தியாவில் உணவு பணவீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அடுத்த ஒரு வருடத்திற்குச் சோயாபீன், சோயா ஆயில், கச்சா பாமாயில், கோதுமை, நெல் அரிசி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ராப்சீட் மற்றும் கடுகு ஆகியவற்றுள் பியூச்சர் டிரேடிங் தடை திங்கட்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications